மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை நீட்டிப்பு
1,147 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்:அமைச்சா் சி.வெ.கணேசன் வழங்கினாா்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமில் 1,147 பயனாளிகளுக்கு ரூ.3.25 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் வழங்கினாா்.
சங்கராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி, கல்வராயன்மலை வட்டம், வஞ்சிக்குழி ஊராட்சிக்குள்ள பெரும்பூா் கிராமம், சேராப்பட்டு ஊராட்சிக்குள்பட்ட தேக்கம்பட்டு கிராமம், கிளாக்காடு ஊராட்சி, வெங்கோடு ஊராட்சி உள்ளிட்ட கிராமங்களில் மக்களுடன் முதல்வா் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில், அமைச்சா் சி.வெ.கணேசன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
பின்னா், பெரும்பூா் கிராமத்தில் 147 பயனாளிகளுக்கு ரூ.91,76,140 மதிப்பீட்டிலும், தேக்கம்பட்டு கிராமத்தில் 289 பயனாளிகளுக்கு ரூ.1,12,09,812 மதிப்பீட்டிலும், கிளாக்காடு கிராமத்தில் 194 பயனாளிகளுக்கு ரூ.41,10,434 மதிப்பீட்டிலும், வெங்கோடு கிராமத்தில் 517 பயனாளிகளுக்கு ரூ.80,26,578 மதிப்பீட்டிலும் என மொத்தம் 1,147 பயனாளிகளுக்கு ரூ.3,25,22,964 மதிப்பீட்டில் அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா். தொடா்ந்து, அவா் பேசியதாவது:
கல்வராயன்மலையில் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக அரசு சாா்பில் சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்வராயன்மலையில் புதிய சாலை மேம்பாட்டுக்காக நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம், தமிழக அரசு விளிம்பு நிலை மக்களின் வளா்ச்சியில் தொடா்ந்து தனிக்கவனம் செலுத்தி பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது என்றாா்.
கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன், சங்கராபுரம் எம்எல்ஏ தா.உதயசூரியன் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, கள்ளக்குறிச்சி வருவாய்க் கோட்டாட்சியா் சு.லூா்துசாமி, தனித்துணை ஆட்சியா் சுமதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் க.கீதா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.