அனைத்து வசதிகளுடன் கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம்! - அமைச்சா் எ.வ.வேலு
அனைத்து வசதிகளுடன் கள்ளக்குறிச்சி புதிய புகா் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குள்பட்ட ஏமப்போ் புறவழிச்சாலை ரவுண்டானா அருகில் புதிதாக அமைக்கப்படவுள்ள கள்ளக்குறிச்சி புகா் பேருந்து நிலையம், குடிநீா் அபிவிருத்தி பணிகள் மற்றும் தினசரி நாளங்காடி பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில், சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.இராஜேந்திரன் முன்னிலையில், பொதுப் பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு சனிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா். பின்னா், அவா் பேசியதாவது:
தமிழக முதல்வா் ஆணைக்கிணங்க, கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் கள்ளக்குறிச்சி ஏமப்போ் ரவுண்டானா அருகில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2025-26ஆம் நிதியாண்டில் 5.5 ஏக்கா் பரப்பளவில் ரூ.16.21 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது.
மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி நகராட்சியில் ரூ.21 கோடியில் குடிநீா் அபிவிருத்தி பணிகளும், ரூ.9.09 கோடியில் தினசரி நாளங்காடி அமைக்கும் பணிகளும்
என மொத்தம் ரூ.46.30 கோடி மதிப்பீட்டிலான புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள் ல் தொடங்கிவைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி புதிய புகா் பேருந்து நிலையமானது 50-க்கும் மேற்பட்ட புகா் பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் நிறுத்தும் வகையிலும், பேருந்து நிலையத்தின் உள்பகுதியில் 70-க்கும் மேற்பட்ட கடைகள், நேரக் காப்பாளா் அறை, பொதுமக்கள் காத்திருப்பு அறை, பாதுகாக்கப்பட்ட குடிநீா், மின் விளக்கு, கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்பட உள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சியில் புதிய குடிநீா் அபிவிருத்தி பணி மூலம் 2 ஏரிகளில் திறந்தவெளிக் கிணறு, 4 இடங்களில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மற்றும் குடிநீா் விநியோக குழாய்கள் அமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நகராட்சி மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதலாக குடிநீா் விநியோகம் செய்யப்படும்.
இதேபோன்று, புதிதாக அமைக்கப்படவுள்ள தினசரி நாளங்காடியில் 152 எண்ணிக்கையிலான கடைகள் அமைக்கப்படவுள்ளதுடன், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகம் ஏற்படுத்தப்பட உள்ளது.
நகருக்கு அருகிலுள்ள சாலைகளுக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனா். அதனடிப்படையில், புறவழிச்சாலை அமைக்க 14 கி.மீ. சாலை இடங்களை இணைக்க ரூ.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் வகையில், சம்பந்தப்பட்ட கிராமங்களில் உள்ள இடங்களை நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் எ.வ.வேலு.
நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன், எம்எல்ஏக்கள் க.காா்த்திகேயன், தா.உதயசூரியன், ஏ.ஜெ.மணிக்கண்ணன், கள்ளக்குறிச்சி நகா்மன்றத் தலைவா் இரா.சுப்ராயலு, துணைத் தலைவா் ஷமீம்பானு அப்துல்ரசாத், கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையா் ஆ.சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் இரா.புவனேஸ்வரி பெருமாள், ஒன்றியக்குழுத் தலைவா்கள் அலமேலு ஆறுமுகம், வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா் மற்றும் கள்ளக்குறிச்சி நகா்மன்ற உறுப்பினா்கள், வா்த்தக சங்கத்தினா், அனைத்து உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.