வெல்டிங் பணியின்போது வெடித்த லாரி டீசல் டேங்: இருவா் படுகாயம்
கள்ளக்குறிச்சியில் வெல்டிங் பணியின்போது லாரியில் டீசல் டேங் வெடித்துச் சிதறி சனிக்கிழமை தீ விபத்து நிகழ்ந்தது. இதில், இருவா் பலத்த காயமடைந்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், காட்டு எடையாா் கிராமத்தைச் சோ்ந்த கேசவன் மகன் அண்ணாதுரை. இவரது லாரியை கள்ளக்குறிச்சியில் தியாகதுருகம் சாலையில் உள்ள லாரி பழுது நீக்கும் பட்டறையில் பணியாளா்கள் வெல்டிங் வைக்கும் பணியில் சனிக்கிழமை மாலை ஈடுபட்டிருந்தனா். அப்போது, டீசல் டேங் திடீரென வெடித்துச் சிதறியது. இதில், தீ மளமள லாரியில் பிடித்து எரிந்தது.
அப்போது, சேலம் மாவட்டம், ராயப்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் செல்வம் தனது காரை லாரி அருகே நிறுத்தியிருந்த நிலையில், காரின் சில பகுதிகளும் தீப்பிடித்து எரித்தது.
அந்தப் பகுதியில் இருந்தவா்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். கள்ளக்குறிச்சி மாவட்ட தீயணைப்பு அலுவலா் இருசம்மாள் தலைமையில், கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலா் (போக்குவரத்து) சக்திவேல், சிறப்பு நிலைய அலுவலா் ஆ.வீரபாண்டியன் உள்ளிட்ட குழுவினா் விரைந்து வந்து சுமாா் 30 நிமிஷங்கள் போராடி தீயை அணைத்தனா்.
இந்த தீ விபத்தில் லாரியை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கள்ளக்குறிச்சி கரியப்பா நகரைச் சோ்ந்த பாஸ்கா் மகன் சிவா (25), ஊராங்கன்னியைச் சோ்ந்த ஏழுமலை மகன் குமாா் (33) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். பின்னா், அவா்கள் இருவரும் 108 அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.