பாஜக அரசால் பெயர் மாற்றப்பட்ட ஊர்கள்: புதிய வரவாக சிந்தூர்புரம்! 11 ஊர்ப் பெயர்கள் விரைவில் மாற்றம்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பதவியேற்ற பிறகு பல முக்கிய ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. அந்த வரிசையில் புதுவரவாக இணையவிருப்பது உத்தரப் பிரதேசத்திலுள்ள ‘சிந்தூர்புரம்’
ஆக்ரா ஜில்லா பஞ்சாயத்து தலைவர் மஞ்சு பதோரியா அரசுக்கு சமர்ப்பித்துள்ள முன்மொழிவில் ஃபதேஹாபாத் மற்றும் பாட்ஷாஹி பாக் ஆகிய ஊர்களின் பெயர்களை மாற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. அதில் ஃபதேஹாபாத் சிந்தூர்புரம் என்றும், பாட்ஷாஹி பாக் பிரம்மபுரம் என்றும் மாற்றப்பட உள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு அலாகாபாத் - பிரயாக்ராஜ் எனப் பெயர் மற்றப்பட்டது. அதே ஆண்டில் ஃபைசாபாத் மாவட்டத்தின் பெயர் அயோத்யா என மாற்றப்பட்டது.
முகல்சாராய் சந்திப்பு கடந்த 2018-இல் தீன் தயாள் உபாத்யாய் சந்திப்பு என மாற்றப்பட்டது.
தில்லியிலுள்ள ராஜ்பாத் - கார்தவ்ய பாத் என்று கடந்த 2022-இல் மாற்றப்பட்டது.
ஹரியாணாவிலுள்ள முக்கிய நகரான குர்கான் கடந்த 2016-இல் குருகிராம் என மாற்றப்பட்டது.
மத்திய பிரதேசத்திலுள்ள ஹோஷங்காபாத் கடந்த 2022-இல் நர்மதாபுரம் எனவும், அதனருகே அமைந்துள்ள பாபாய் நகர் - மாகான் நகர் எனவும் மாற்றப்பட்டன.
அந்தமான் நிகோபார் தீவுகளிலுள்ள ராஸ் தீவுகள் கடந்த 2018-இல் பிரதமர் மோடி அங்கு சென்றிருந்தபோது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் த்வீப் எனவும், நீல் தீவு, ஹேவ்லாக் தீவு ஆகிய இரு இடங்களும் முறையே ஷாஹீத் த்வீப், ஸ்வராஜ் த்வீப் எனவும் மாற்றப்பட்டன.
இந்த ஆண்டுக்குள் உத்தரகண்ட் மாநிலத்தில் ஹரித்வார், டேராடூன், நைனிடால், உதம் சிங் நகர் மாவட்டங்களில் மொத்தம் 11 ஊர்களின் பெயர்கள் மாற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கடந்த திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.
அதில் கவனிக்கத்தக்கது என்னவெனில், ஹிந்து கடவுள்கள், சாதுக்கள் மற்றும் புராதனக் கதையின் கதாபாத்திரங்களின் பெயர்களே சூட்டப்படும் என்றிருப்பதும்,பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் பெயர்களும் சூட்டப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.