பாஜக அரசால் பெயர் மாற்றப்பட்ட ஊர்கள்: புதிய வரவாக சிந்தூர்புரம்! 11 ஊர்ப் பெயர்க...
தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!
விழுப்புரம்: தாம்பரத்திலிருந்து விழுப்புரம் வழியாக திருச்சி வரை இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயிலின் சேவை ஜூலை 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள்தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சியிலிருந்து செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விழுப்புரம் வழியாக தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது.
இந்த ரயிலின் சேவை ஜூன் 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் இந்த ரயிலின் சேவை மேலும் ஒரு மாதத்துக்கு அதாவது ஜூலை 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 06190), தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில் (வண்டி எண் 06191) ஆகிய இரு ரயில்களும் 22 முறை இயக்கப்படும். மேலும் தாம்பரம் - திருச்சி இடையேயான சிறப்பு ரயில் புறப்படும் நேரமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தாம்பரத்திலிருந்து முன்பு பிற்பகல் 3.45 மணிக்குப் புறப்பட்ட தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில் (வண்டி எண் 06191) இனி பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்படும். இதன் காரணமாக செங்கல்பட்டுக்கு பிற்பகல் 3.58 மணிக்கு வந்து மாலை 4 மணிக்கும், மேல்மருவத்தூருக்கு மாலை 4.23 மணிக்கு வந்து 4.25 மணிக்கும், திண்டிவனத்துக்கு மாலை 4.48 மணிக்கு வந்து மாலை 4.50 மணிக்கும் இந்த ரயில் புறப்பட்டுச் செல்லும்.
விழுப்புரம் மற்றும் அடுத்து வரும் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கில்லர் படம் பூஜையுடன் துவக்கம் - புகைப்படங்கள்