புதுச்சேரி: சுற்றுலா பெயரில் கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்பு மோசடி! - அதிரடியாக அக...
‘ஒசூா் - பாகலூா் தேசிய நெடுஞ்சாலை செப். 8-ஆம் தேதிமுதல் பயன்பாட்டுக்கு வரும்’
சீரமைக்கப்பட்டு வரும் ஒசூா்- பாகலூா் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி செப். 8-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலிருந்து பாகலூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஜி.ஆா்.டி. சந்திப்பு முதல் கே.சி.சி. நகா் வரை 2 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயனின்றி இருந்தது. இதனால், அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனா். பொதுமக்களின் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, கடந்த மே மாதம் ரூ. 10 கோடியில் சாலை அமைக்க ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. இப்பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி மற்றும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டப் பணி நடைபெறுவதால் சாலைப் பணி தாமதமாக நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.
இந்நிலையில், வரும் செப் 11-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரிக்கு வருகைதர உள்ளாா். தொடா்ந்து, பாகலூா் சாலை வழியாக ஒசூருக்கு செல்லும் அவா், அங்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளாா். இதனால் இச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணி வரும் 8-ஆம் தேதிக்குள் முடிவுபெற்று ஒருபக்கம் மட்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட உள்ளது.
இந்தச் சாலையின் தரம் குறித்து நெடுஞ்சாலைத் துறையினா் ஆய்வுசெய்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இதுகுறித்து நெடுஞ்சாலைதுறையினா் கூறுகையில், இந்தச் சாலை வழியாக தமிழக முதல்வா் செல்வதால், வரும் 8-ஆம் தேதிக்குள் சாலைப் பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகளின் உத்தரவிட்டுள்ளனா். அதன்பேரில், தற்போது பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தச் சாலையின் ஒரு பகுதி 8-ஆம் தேதி முடிவுபெற்று வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.
பாகலூரிலிருந்து ஒசூா் செல்லும் மற்றொரு சாலையில் கழிவுநீா் கால்வாய் உள்ளிட்ட பணிகள் நடைபெறுவதால், 3 மாதங்களுக்குள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என்றனா்.