"வைகோ சினிமாவில் இருந்திருந்தால் இன்றைக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார்" - தம்பி ராமை...
ADMK: ``கட்சிக்கு என்ன பாதிப்பு என்பது போகப் போகத் தெரியும்" - அழுத்தமாகப் பேசும் செங்கோட்டையன்
அ.தி.மு.க மூத்த தலைவரான செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் ஒன்றிணைந்தால்தான் அ.தி.மு.க வெற்றி பெற முடியும். 'மறப்போம் மன்னிப்போம்' என்ற அடிப்படையில் கட்சியைவிட்டு வெளியே சென்றவர்களை அரவணைக்க வேண்டும்.
10 நாள்களில் பிரிந்தவர்களை மீண்டும் சேர்த்து அ.தி.மு.க-வை ஒன்றிணைக்க வேண்டும். இது நடந்தால்தான் சுற்றுப்பயணம், தேர்தல் பணிகளில் இறங்கி பணியாற்றுவேன்" எனத் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, இன்று செங்கோட்டையன் அமைப்புச் செயலாளர் பொறுப்பு மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாகவும், அத்துடன் அவரது ஆதரவாளர்களான ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளையும் நீக்குவதாகவும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பைத் தொடர்ந்து, செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, ``அ.தி.மு.க மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, தொண்டர்களுடைய உணர்வுகள், மக்களுடைய எதிர்பார்ப்பைப் பிரதிபலிக்கின்ற வகையில், நேற்றைய தினம் அந்த விளக்கத்தை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தேன்.
கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்களும், 'காலில் வேண்டுமானாலும் விழுகிறோம். இயக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்' எனப் பேசியிருக்கிறார்கள். இதற்கு மேலும் அவர்கள் கேட்க என்ன இருக்கிறது?

ஆனால் கட்சி தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லை என்கிற பொழுது, இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்துவது இந்த இயக்கத்திற்கு நல்லது. அந்த முறையில்தான், என் கருத்தைத் தெரிவித்தேன்.
அதற்கு இன்று கழகத்திலிருந்து கட்சிப் பொறுப்புகளைப் பறித்து விடுவிக்கப்பட்டிருக்கிறேன். ஜனநாயகத்துடன், சுயமரியாதையோடு யார் வேண்டுமானாலும் எந்தக் கருத்தை வேண்டுமானாலும் சொல்லலாம். அதற்குத் தடை இல்லை என்று பல மேடைகளில் பேசியிருக்கிறார்கள்.
இந்த நடவடிக்கைக்கு முன்பு என்னிடம் கட்சி சார்பில் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். விளக்கம் கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. இதனால் கட்சிக்கு என்ன பாதிப்பு என்பது போகப் போகத் தெரியும்.
இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை இப்போது சொல்வதற்கு இல்லை. இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லும். நான் நேற்று என்ன கூறினேனோ அதை நோக்கியே என் பணி தொடரும்.
நான் நேற்று பேட்டியளித்தற்குப் பிறகு சிலர் என் கருத்துக்கு ஆதரவாக என்னிடம் பேசினார்கள். என் மீதான நடவடிக்கையால் கட்சிக்கு என்ன பாதிப்பு என்பதையும் போகப் போக காலம் சொல்லும். என் கருத்து சரியானது என டிடிவி தினகரன், சசிகலா மட்டுமல்ல நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, பிரேமலதா கூட ஆமோதித்திருக்கிறார்கள்" என்றார்.