ஓய்வை அறிவித்தது ஏன்? மார்கஸ் ஸ்டாய்னிஸ் விளக்கம்!
ஆஸி. வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தது எளிதான முடிவல்ல எனக் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியளித்துள்ளார்.
71 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டாய்னிஸ் 1,495 ரன்கள் 48 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
35 வயதாகும் ஸ்டாய்னிஸ் அதிரடியாக விளையாடி புகழ்ப்பெற்றவர். டி20 போட்டிகளில் கவனம் செலுத்த இந்த முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாக கிரிக்கெட் ஆஸ்திரேலிய ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எளிதான முடிவல்ல
எனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி உச்சபட்ச அளவில் விளையாடியதை நினைத்து எப்போதும் மகிழ்ச்சியடைவேன்.
ஓய்வை அறிவித்தது எளிதான முடிவல்ல. ஆனால், ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகுவதற்கு இதுதான் சரியான நேரமென கருதுகிறேன். அதேசமயம் எனது கிரிக்கெட் வாழ்வின் அடுத்த கட்டத்தில் முழுமையான கவனத்தை செலுத்த இந்த முடிவை எடுத்துள்ளேன்.
தலைமைப் பயிற்சியாளர் (மெக்டொனால்டு) உடன் எனக்கு அருமையான பந்தம் இருந்தது. அவரது ஆதரவுக்கு பாராட்டுகள்.
பாகிஸ்தானில் எனது சகவீரர்களுக்காக நான் கைதட்டி மகிழ்வேன் என்று கூறியுள்ளார்.
ஸ்டாய்னிஸ் - நல்ல மனிதர்
ஆசி. தலைமைப் பயிற்சியாளர் மெக்டொனால்டு , “ஒருநாள் போட்டிகளில் ஸ்டாய்னிஸ் பத்தாண்டுகளுக்கும் மேலாக முக்கியமான அங்கமாக இருந்துள்ளார். முக்கியமான வீரராக மட்டுமில்லாமல் அருமையான மனிதரும்கூட. இயற்கையாகவே ஒரு நல்ல தலைவர் அவர். மிகவும் பிரபலமான நல்ல மனிதர்” எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே கம்மின்ஸ், ஹேசில்வுட், மார்ஷ் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் இவரது ஓய்வு முடிவு ஆஸி. அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமென கருதப்படுகிறது.
பிப்.19இல் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கான 15 பேர் கொண்ட அணியை பிப்.12க்குள் அறிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.