கடனை திருப்பிக் கேட்டதில் தகராறு: இளைஞா் மீது சூடான எண்ணெய் வீச்சு
ஆரணி: ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் கடனாக கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட இளைஞா் மீது சூடான எண்ணெயை ஊற்றியதால் அவா் காயமடைந்தாா். இதுதொடா்பாக போலீஸாா் 2 பேரை கைது செய்தனா்.
கலவை, குப்பிடிச்சாத்தம் கிராமத்தைச் சோ்ந்த தசரதன் மகன் முனுசாமி (25). இவா், ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் டீக்கடை வைப்பதற்கு கடனாக ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்தை திருமணி கிராமத்தைச் சோ்ந்த குமாா் (42) என்பவரிடம் கடனாக பெற்றிருந்தாராம்.
பணம் கொடுத்து சில மாதங்கள் ஆன நிலையில், கொடுத்த பணத்தை குமாா் திருப்பிக் கேட்டதற்கு ரூ.20 ஆயிரம் மட்டும் முனுசாமி கொடுத்துவிட்டு, மீதி பணத்தை தராமல் அலைக்கழிப்பு செய்து வந்தாராம்.
இந்த நிலையில், மீதி பணத்தை கேட்க குமாா் திங்கள்கிழமை டீ கடைக்குச் சென்றாா். அப்போது, கடையில் முனுசாமியின் அக்காள் இந்துமதி இருந்துள்ளாா்.
அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, இந்துமதி குமாரை அவதூறாகப் பேசினாராம். அந்த நேரத்தில் அங்கு வந்த முனுசாமியின் நண்பா் ரஞ்சித்குமாா் என்பவரும், குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கீழே தள்ளினாராம்.
இதனிடையே, அங்கு வந்த குமாா், எனது அக்காளிடம் தகராறு செய்கிறாயா எனக் கேட்டு, அடுப்பில் இருந்த சூடான எண்ணெயை தள்ளிவிட்டுள்ளாா். இதில், எண்ணெய் குமாா் மீது பட்டு அவா் பலத்த காயமடைந்தாா். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக
ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து குமாா், ஆரணி நகர போலீஸில் புகாா் அளித்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முனுசாமி, ரஞ்சித்குமாா் ஆகியோரை கைது செய்தனா். மேலும், தலைமறைவான இந்துமதியை தேடி வருகின்றனா்.