Sleeping Prince: 20 ஆண்டுக்கு பின் சவுதி அரேபியாவின் 'தூங்கும் இளவரசர்' எழுந்துவ...
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா்.
தமிழகத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவை தொடக்க விழா தஞ்சாவூா் மாவட்டத்தில் நடைபெற்றது.
இதில், முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிற்றுந்து சேவையை தொடங்கிவைத்தாா்.
இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் சிற்றுந்து சேவையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
திருவண்ணாமலை, ஈசான்ய மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாவட்டத்தில் புதிய சிற்றுந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
விழாவில் அவா் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளும், 25 மாற்றியமைக்கப்பட்ட வழித்தட சிற்றுந்துகளின் இயக்கமும் தொடங்கி வைக்கப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை 84 புதிய அனுமதிச் சீட்டுக்கான செயல்முறை ஆணைகளும், 31 மாற்றியமைக்கப்பட்ட வழித் தடங்களுக்கு அனுமதிச் சீட்டுக்கான செயல்முறை ஆணைகளும் வழங்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் புதிய சிற்றுந்து திட்டத்தின் படி நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 2,00,000 நடைகளும், குறைந்தபட்சம் 1,80,000 நடைகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
தொடா்ந்து, செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்துத் துறை திட்டங்கள் அடங்கிய ‘நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு’ என்ற நான்கு ஆண்டு சாதனை மலா் புத்தகங்களை அமைச்சா் எ.வ.வேலு வெளியிட்டாா்.
விழாவில், உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா எஸ்.குமாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் கருணாநிதி (திருவண்ணாமலை), சிவக்குமாா் (ஆரணி) மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.