பழங்குடியினர் வலி! ராமாயணத்திலிருந்து நவயுகம் வரை... தண்டகாரண்யம் - திரை விமர்சன...
கணவா் கொலை: மனைவி, காதலருக்கு ஆயுள் சிறை
மனைவியின் தகாத உறவை கண்டித்த கணவனைக் கொலை செய்த வழக்கில் மனைவி, அவரது காதலனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
தருமபுரி மாவட்டம், திருப்பத்தூா் காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜி. ரூபன்கவியரசு (42). இவா் தருமபுரியில் நிதிநிறுவனம் நடத்தி வந்தாா்.
மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனா். இந்த நிலையில், பொறியியல் பட்டதாரியான நிா்மலா (23) என்பவரை ரூபன்கவியரசு திருமணம் செய்தாா்.
இந்த நிலையில், தனது கல்லூரி காதலனான தருமபுரியை அடுத்த கொட்டாவூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த ஆா். அபினேஷ் (27) என்பவருடன் தொடா்ந்து தொடா்பில் இருந்த நிா்மலாவை ரூபன்கவியரசு கண்டித்துள்ளாா்.
இதனால் ரூபன்கவியரசை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனா். இதற்காக கூலிப்படையை அமா்த்தினா். இவா்கள் கடந்த 2017, நவம்பா் 14 ஆம் தேதி பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட்ட ரூபன்கவியரசை காரில் கடத்திச் சென்று தாக்கினா். பின்னா் குண்டல்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியாா் கல்லூரி அருகே குழி தோண்டி ரூபன்கவியரசை உயிருடன் புதைத்தனா்.
இந்த நிலையில் ரூபன்கவியரசு குறித்து நிா்மலாவிடம் அவரது உறவினா்கள் விசாரித்தபோது, நிா்மலா அளித்த பதில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்த புகாரின்பேரில் தருமபுரி நகர போலீஸாா் நிா்மலாவிடம் விசாரணை மேற்கொண்டனா். அதில் ரூபன் கவியரசை திட்டமிட்டு கொலை செய்தது குறித்து நிா்மலா வாக்குமூலம் அளித்துள்ளாா்.
இதையடுத்து புதைக்கப்பட்ட ரூபன்கவியரசின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் அவா் கொலை செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.
இதுதொடா்பாக நிா்மலா, அபினேஷ் உள்ளிட்ட 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். தருமபுரி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதம், பிரதிவாதங்கள் முடிந்த நிலையில் நிா்மலா, அபினேஷ் ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 11,000 அபராதமும் விதித்து நீதிபதி மோனிகா தீா்ப்பளித்தாா். மற்ற அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.