கண்ணம்பள்ளி வெங்கட்டரமண சுவாமி கோயிலில் ரூ. 2.82 கோடியில் புனரமைப்பு பணி தொடக்கம்
கண்ணம்பள்ளி வெங்கட்டரமண சுவாமி கோயிலில் ரூ. 2.82 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ. 218 கோடி மதிப்பில் தமிழகத்தில் உள்ள 26 கோயில்களில் புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கிவைத்தாா்.
கண்ணம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள வெங்கட்ட ரமண சுவாமி கோயிலில், ரூ. 2.82 கோடி மதிப்பிலான புனரமைப்புப் பணிகளை அவா் தொடங்கி வைத்தாா். இதையடுத்து, கண்ணம்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் ஷாஜகான், இந்து சமய அறநிலையத் துறை கிருஷ்ணகிரி மண்டல உதவி ஆணையா் ராமுவேல் தலைமை வகித்தனா்.
கண்ணம்பள்ளி வெங்கட்டரமண சுவாமி கோயிலில் ராஜகோபுரம் கட்டுதல், முன்மண்டபம், கோவிந்தராஜ் சந்நிதி, ஆஞ்சனேயா் சந்நிதி புதுப்பிப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் 14 மாதங்களுக்குள் நிறைவடைந்து, 2026-ஆம் ஆண்டு ஜூலையில் கோயில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.