கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!
தேய்பிறை அஷ்டமி: காலபைரவா் கோயில்களில் சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, காலபைரவா் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி கணபதி ஹோமம், அஸ்டதிக்பதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், பூா்ணாஹூதி, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன. இதையடுத்து தங்கக் கவச சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, காலபைரவா் உற்சவம், பரணி தீபம் ஏற்றுதல் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வெண்பூசணி, தேங்காய், எலுமிச்சையில் தீபமேற்றி வழிபட்டனா். இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை 165 கிராமங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனா்.
இதேபோல, கிருஷ்ணகிரியை அடுத்த சூரன்குட்டையில் உள்ள தட்சிண காலபைரவா் கோயில், கந்திகுப்பம் காலபைரவா் கோயிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.