``கனடாவில் இருந்து கொண்டு இந்தியாவில்..'' - காலிஸ்தான் குறித்து கனடா புலனாய்வு அறிக்கை
பல ஆண்டுகளாக, இந்தியா, கனடா நட்பு நாடுகளாக இருந்து வந்தது. ஆனால், காலிஸ்தான் நிர்வாகி நிஜ்ஜார் கொலை வழக்கில், இந்தியா மீது கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்ட, இந்த உறவில் விரிசல் விழுந்தது.
தற்போது கனடாவின் பிரதமராக மார்க் கார்னி பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) தொடங்கி செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) வரை, கனடாவில் ஜி7 உச்சி மாநாடு நடந்தது. இதில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இத்தாலிய பிரதமர் மெலோனி உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டிற்கு கனடா சென்ற மோடியை, கனடா பிரதமர் மார்க் கார்னி சந்தித்து பேசினார். இதில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு சற்று புதுப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது, கனடாவின் பாதுகாப்பு புலனாய்வு சேவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கம் செயல்படுகிறது. அது கனடாவை தங்களது இயக்கத்தின் வளர்ச்சிக்காக, நிதி உதவி பெறும் இடமாகவும், இந்தியாவில் வன்முறைகளை கிளப்ப திட்டமிடும் இடமாகவும் பயன்படுத்தி வருகிறது. கனடாவில் சிறிய அளவில் தான் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இருக்கின்றனர்.
அமைதியாக காலிஸ்தான் நாட்டிற்காக போராடுவது கனடாவில் பயங்கரவாதிகளாக எடுத்துகொள்ளப்பட மாட்டார்கள்.
மேலும், கனடாவின் தேர்தலில் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலையீடு இருந்து வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.