கருப்புப் பணத்தை கொண்டுவருவோம் என்றவர்கள் வாட்ஸ்ஆப்-ஐ கண்காணிப்பது ஏன்? காங்கிரஸ்
வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தைக் கொண்டுவருவோம் என்ற கோஷத்தோடு ஆட்சிக்கு வந்தவர்கள் வாட்ஸ்ஆப் சாட்களை கண்காணிக்க விரும்புகிறார்கள் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
நாட்டில் உள்ள தனிநபர்களின் வாட்ஸ்அப் சாட்கள் மூலம் ரூ.200 கோடி வரி ஏய்ப்புக் கண்டறியப்பட்டதாக வருமான வரி மசோதா மீது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்த நிலையில், அதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் கண்டனத்தில், இந்த சர்வாதிகார ஆட்சி தொடங்கும்போது 'வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை நம் நாட்டுக்குக் கொண்டு வருவோம்' என்ற முழக்கத்தை முன் வைத்திருந்தனர் என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை பிரதமர் மோடி ஒவ்வொரு பைசாவையும் திரும்பக் கொண்டுவருவார் என்றே பாஜகவினர் கூறினார்கள்.
ஆனால், இப்போதோ, அதே நபர்கள்தான், உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் நெருங்கியவர்களுக்கும் நீங்கள் என்ன சொல்கிறீர்கள், நீங்கள் எங்கு இருக்கிறீர்கள், எங்கெல்லாம் செல்கிறீர்கள் என்பதைக் கண்காணிக்க விரும்புகிறார்கள் என்று சொல்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் உங்களை எப்படியெல்லாம் கட்டுப்படுத்த விரும்புகிறார்களோ, அந்த விதத்தில் எல்லாம் உங்களைக் கட்டுப்படுத்த முடியுமே தவிர, இதற்கும் வரி ஏய்ப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று காங்கிரஸ் காட்டமாகக் கூறியிருக்கிறது.
எனவே, மக்களாகிய நீங்கள் விரைவில் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர்களை வீட்டுக்கு அனுப்பினால்தான் உங்களுக்கு நல்லது நடக்கும். இதைப் பற்றி தீவிரமாக சிந்தித்துப் பாருங்கள் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.