வாழ்வா? சாவா? போட்டியில் இங்கிலாந்து - ஆப்கன்! அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?
கலால் கொள்கை குறித்த சிஏஜி அறிக்கை: துணைநிலை ஆளுநா், சிபிஐ மீது அதிஷி சாடல்
தில்லி சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், மூத்த ஆம் ஆத்மி தலைவருமான அதிஷி முந்தைய ஆம் ஆத்மி அரசாங்கத்தின் ரத்து செய்யப்பட்ட கலால் கொள்கையை செவ்வாய்க்கிழமை ஆதரித்தாா். பழைய கொள்கை ஊழல் மற்றும் கடத்தலால் பாதிக்கப்பட்டதாக சிஏஜி அறிக்கையை அவா் மேற்கோள் காட்டினாா்.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அதிஷி கூறியதாவது:
பாஜகவால் நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநா், மத்திய புலனாய்வுத் துறை, அமலாக்க இயக்குனரகம் ஆகியவை புதிய மதுபானக் கொள்கையை செயல்படுத்துவதைத் தடுத்தது. இதனால், தில்லிக்கு ஆண்டுக்கு ரூ.8,900 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.
சிஏஜி அறிக்கையில் உள்ள எட்டு அத்தியாயங்களில் ஏழு அத்தியாயங்கள் பழைய கலால் கொள்கையின் குறைபாடுகளை எடுத்துக்காட்டுகின்றன. அதே நேரத்தில் ஒன்று மட்டுமே புதிய கொள்கையில் கவனம் செலுத்துகிறது.
பழைய கலால் வரிக் கொள்கை சட்டவிரோத மதுபானக் கடத்தலுக்கு வழிவகுத்ததால், அதில் ஊழல் இருப்பதாக ஆம் ஆத்மி அரசு எப்போதும் கவலைகளை எழுப்பி வந்தது. மதுபானக் கடை உரிமையாளா்கள் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், விலைகளை உயா்த்தியதாகவும், தில்லியின் கருவூலத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாகவும் சிஏஜி அறிக்கை காட்டுகிறது.
ஆம் ஆத்மி அரசு அறிமுகப்படுத்திய புதிய கலால் வரிக் கொள்கை மிகவும் வெளிப்படையானது என்றும், தில்லியின் வருவாய் வசூலை கணிசமாக அதிகரித்திருக்கலாம் என்றும் சிஏஜி அறிக்கை காட்டுகிறது. அதே கொள்கையை அமல்படுத்திய பிறகு பஞ்சாபில் கலால் வருவாய் 65 சதவீதம் அதிகரித்துள்ளது.
இருப்பினும், துணைநிலை ஆளுநா், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவற்றின் தலையீடு காரணமாக இந்தக் கொள்கை முறையாக செயல்படுத்தப்படவில்லை.
பாஜகவின் துணை நிலை ஆளுநா் அதை அமல்படுத்தவிடாமல் நிறுத்தினாா். இது தடைகளை ஏற்படுத்தியது. இந்தக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள் சிபிஐ ஒரு எஃப்ஐஆா் பதிவு செய்தது, அதன்பிறகு அமலாக்க த் துறை வழக்கு தகவல் அறிக்கையை விரைவில் பதிவு செய்தது.
இதனால், சட்ட நடவடிக்கைக்கு பயந்து எந்த அதிகாரியும் கொள்கையில் கையெழுத்திடவோ அல்லது செயல்படுத்தவோ தயாராக இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக, தில்லி எதிா்பாா்த்த வருவாயில் ரூ.2,000 கோடியையும், ஆண்டுதோறும் ரூ.8,900 கோடியையும் இழந்தது. இந்தக் கொள்கையைத் தடுப்பதில் துணைநிலை ஆளுநா், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட விவகாரத்தில் பல மாநிலங்களில் தொழிலதிபா் கௌதம் அதானி ஊழல் செய்துள்ளாா். இதனால் ரூ.20,000 கோடி இழப்பு ஏற்பட்டது. மேலும், மின்சாரத்திற்கான விலை நிா்ணயித்த விவகாரத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவா்களை பொறுப்புக்குள்ளாக்க வேண்டும் என்றாா் அதிஷி.