காஞ்சிபுரத்தில் சித்தியைக் கொன்ற மகன் தப்பியோட்டம்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சித்தியைக் கொலை செய்துவிட்டு மகன் தப்பி ஓடினார்.
காஞ்சிபுரம் அருகே உள்ள வையாவூர் ஊராட்சிக்கு உட்பட்டது நல்லூர் கிராமத்தில் வசிக்கும் துளசி என்பவரின் மனைவி சுமதி (வயது 45). இவர் வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்த போது, துளசியின் அண்ணன் சுப்பிரமணியனின் மகன் துரை, விறகு வெட்டும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.
துளசிக்கும் சுப்பிரமணியனுக்கும் இடப் பிரச்சினை சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்படுவது உண்டு. இன்றும் இடப் பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்ட நிலையில், சித்தியை அரிவாளால் துரை வெட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார், சுமதியின் உடலைக் கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் துரையைத் தேடி வருகின்றனர்.