60,000 பேருக்கு வேலை: மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தை வெளியிட்ட முதல்வர...
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு!
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71 ஆவது இளைய பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சர்மா டிராவிட் அட்சய திருதியை நாளான புதன்கிழமை பொறுப்பேற்று கொண்டார்.
ஸ்ரீ சுப்பிரமண்ய கணேச சர்மா திராவிட்டுக்கு மடத்தின் தற்போதைய 70 ஆவது பீடாதிபதியாக இருந்து வரும் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பஞ்சகங்க தீர்த்த திருக்குளத்தில் சன்யாச ஆசிரம தீட்சை வழங்கினார்.
கோயில் திருக்குளத்தில் ஆதீனங்கள்,சந்நியாசிகள் ஆகியோருக்கு மிதக்கும் தெப்பலில் அமர்ந்து நிகழ்வை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பின்னர் இருவரும் இணைந்து மூலவர் காமாட்சி அம்பிகையை தரிசித்தனர். ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இளையமடாதிபதிக்கு ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற நாமம் சூட்டப்பட்டது.

இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே. ஆர். ஸ்ரீராம், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்,துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி , டாக்டர் சுதா சேஷய்யன் ஆகியோர் உட்பட முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பின்னர் மடாதிபதிகள் இருவரும் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து சங்கர மடத்திற்கு மங்கல மேல வாத்தியங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அங்கு இளையமடாதிபதிக்கு உபதேசம் செய்யப்பட்டு 71 ஆவது பிடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
விழாவையொட்டி காமாட்சி அம்மன் கோயில் வளாகமும் சங்கர மடமும் வண்ண மின்விளக்குகளாலும், வண்ணமலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்த விழா ஏற்பாடுகளை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் மற்றும் சங்கர மடத்தின் ஸ்ரீ காரியம் செல்லா விசுவநாத சாஸ்திரி ஆகியோர் தலைமையிலான விழாக் குழுவினர் செய்திருந்தனர்.