பாஜக - தவெக கூட்டணி பேச்சுவார்த்தையா? - நயினார் நாகேந்திரன் பதில்!
பாஜக - தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பது குறித்து தெரியவில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது பீடாதிபதியாக ஸ்ரீசத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இன்று பதவியேற்று கொண்டார். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் ஆலய பஞ்சகங்கா குளத்தில் ஸ்ரீ விஜியேந்திரர் தலைமையில் தீட்சை அளிக்கப்பட்டு முறைப்படி மடாதிபதியாக பதவியேற்றார்.
இந்நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி, சுப்பிரமணிய சுவாமி, ஆடிட்டர் குருமூர்த்தி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய நயினார் நாகேந்திரன்,
"இளைய மடாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
பாஜக - தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பது குறித்து தெரியவில்லை. பிரதமர் மற்றும் அமித்ஷா சந்திப்பிற்குப் பின் காமாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ளேன், தற்போது பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். நாளை கோட்டையில் சந்திக்கிறேன்.
திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும். தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது.
தேர்தல் பணியை திமுக ஆரம்பித்து இருக்கலாம், ஆனால் ஆட்சிக்கு வருவதை மக்கள் முடிவு செய்வார்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | 'உங்க அன்ப புரிஞ்சுக்குறேன்.. ஆனால்..!' - தவெக தலைவர் விஜய் பதிவு!