கரியக்கோயில் அணை திறப்பு: ஆற்றுப்படுகை கிராம மக்கள் மகிழ்ச்சி
வாழப்பாடி: சேலம் மாவட்டம் , பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டியில் உள்ள கரியக்கோயில் அணையிலிருந்து புதன்கிழமை காலை (ஏப்.30) தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால், ஆற்றுப்படுகை கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் கரியக்கோயில் ஆற்றின் குறுக்கே பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் 52.49 அடி உயரத்தில் 190 மில்லியன் கனஅடி தண்ணீரைத் தேக்கும் வகையில் 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.
இந்த அணையால், பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, கத்திரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், 3,600 ஏக்கர் விளைநிலங்கள் வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன. பனைமடல், ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி, கொட்டவாடி கிராமங்களில் பாசன தடுப்பணைகளும், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூர் அபிநவம், புத்திரகவுண்டன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் ஏரிகளும் நீர்வரத்து மற்றும் நேரடி பாசனம் பெறுகின்றன.
கடந்த ஆண்டு பருவமழையின்போது பெய்த மழையால் அணை அதன் முழு கொள்ளளவையும் எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 50.90 அடியில் 178 மில்லியன் கனஅடி தண்ணீரை மட்டும் அணையில் தேக்கிவைத்துக் கொண்டு அணைக்கு வரும் உபரிநீா் இரு மாதங்களாக கரியக்கோயில் ஆற்றில் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தால் அணைக்கு நீர்வரத்து நின்று போனது. ஆற்றுப்படுகை கரையோர கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டமும் சரிந்து போனது.


தேமுதிக இளைஞரணி செயலராக விஜய பிரபாகரன் நியமனம்!
எனவே, கோடையை முன்னிட்டு கரியக்கோயில் அணையில் இருந்து குடிநீா் தேவை, நிலத்தடி நீா்மட்ட உயா்வுக்காக ஆறு, வாய்க்காலில் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.
இதை ஏற்று புதன்கிழமை காலை 8 மணி முதல் தொடர்ந்து 10 நாள்களுக்கு வினாடிக்கு 108 கன அடி வீதம், நாளொன்றுக்கு 9.33 மில்லியன் கன அடி (மொத்தத்தில் 91.87 மில்லியன் கன அடிக்கு மிகாமல்) தண்ணீர் தலைமை மதகு வழியாக கரியக் கோயில் ஆற்றில் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனையடுத்து ஆயக்கட்டு விவசாயிகள் முன்னிலையில், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் புதன்கிழமை காலை கரியக்கோயில் அணையிலிருந்து தலைமை மதகு வழியாக கரியக்கோயில் ஆற்றில் தண்ணீர் திறந்து வைத்தனர். இதனால் ஆற்றுப்படுகை கிராம மக்களும், நேரடி ஆறு மற்றும் ஏரிப் பாசன விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாய்க்கால் பாசனம்:இதனைத் தொடர்ந்து, வரும் மே.10 காலை 8 மணி முதல் தொடர்ந்து 24 நாள்களுக்கு வலது மற்றும் இடது வாய்க்கால்களில் வினாடிக்கு 15 கன அடி வீதம் மொத்தம் 30 கன அடி (நாளொன்றுக்கு 2.59 மில்லியன் கன அடி மொத்தத்தில் 61.25 மில்லியன் கன அடிக்கு மிகாமலும்) பாசனத்திற்கு சிறப்பு நனைப்பாக பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அணை வாய்க்கால் பாசன விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, கத்திரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், 3,600 ஏக்கா் விளைநிலங்கள் வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன.