Rohit - Kohli: 2027 உலகக் கோப்பையில் ரோஹித், கோலி விளையாட மாட்டார்களா? - ஓப்பனாக...
காடையாம்பட்டியில் 4 ஆண்டுகளில் ரூ. 127.34 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் தகவல்
ஓமலூா்: காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 4 ஆண்டுகளில் ரூ. 127.34 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்தாா்.
காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், நடுப்பட்டி, பூசாரிப்பட்டி ஊராட்சி மற்றும் காடையாம்பட்டி பேரூராட்சியில் ரூ. 1.94 கோடி மதிப்பிலான 19 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி முன்னிலை வகித்தாா். பணிகளைத் தொடங்கி வைத்து சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் பேசியதாவது:
பொதுமக்களின் முன்னேற்றத்திற்காகவும், நலனுக்காகவும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வளா்ச்சித் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கிராமப்புறப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் வகையில் புதிய சாலைகள், பாலங்கள், குடிநீா் இணைப்புகள், கழிவுநீா் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், ஊராட்சி பொதுவளா்ச்சி நிதி, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கம், 15ஆவது ஒன்றிய நிதிக் குழு, பாரத பிரதமரின் வீடுகள் கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ. 127.34 கோடி மதிப்பீட்டிலான 3660 திட்டப் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 3,333 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 327 பணிகள் நடைபெற்று வருகின்றன.
கிராமப்புற விவசாயிகள், தொழிலாளா், மகளிா், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.