மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு
காட்டன் பட்ஸ்களைப் பயன்படுத்தலாமா? குறட்டை நல்லதா? - நம்பிக்கையும் உண்மையும்!
காதில் உள்ள அழுக்குகளை நீக்க காட்டன் பட்ஸ்களைப் பயன்படுத்தலாமா? காது கேட்கும் கருவிகள் பாதுகாப்பானதா? ஆழ்ந்த தூக்கத்தினால்தான் குறட்டை ஏற்படுகிறதா?
இதுபோன்ற தவறான நம்பிக்கைகளுக்கு பதிலளிக்கிறார் புவனேஸ்வரம் எஸ்யுஎம் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை நோய்களின் மூத்த ஆலோசகர் டாக்டர் ராதாமாதப் சாஹு.
காட்டன் பட்ஸ் பாதுகாப்பானவை, காதுகளை சுத்தம் செய்வதற்கு சிறந்தது
காதுகளைத் தொடர்ந்து பட்ஸ்களால் சுத்தம் செய்வது தீங்கு விளைவிக்கும். காட்டன் பட்ஸ் என்பது காதில் உள்ள மெழுகை காதின் உள்ளே தள்ளும். இதனால் திடீரென கேட்கும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், காதில் அடைப்புகள் மற்றும் தொற்றுகளை ஏற்படுத்தும். காதுகள் அதுவாகவே சுத்தம் செய்யும் வகையிலே இருக்கின்றன. எனவே, காதுகளை மெனக்கெட்டு சுத்தம் செய்யத் தேவையில்லை. வாய் மெல்லுதல் மற்றும் பேசுவதன் மூலம் தாடை செயல்படுகிறது. இது காதில் உள்ள அழுக்குகளை தானாகவே வெளியேற்றும். காதின் வெளிப்புற பகுதியைச் சுத்தம் செய்ய வேண்டுமானால் பருத்தியாலான பட்ஸ்களைப் பயன்படுத்தலாம்.
குறட்டை என்பது ஆழ்ந்த தூக்கத்தின் அறிகுறி
குறட்டை என்பது உண்மையில் தொந்தரவான தூக்கத்தின் அறிகுறியாகும். மூக்கு, வாய் வழியாக காற்றின் ஓட்டம் குறிப்பிட்ட அளவு தடைபடும்போது திசுக்கள் அதிர்வடைவதால் குறட்டைச் சத்தம் ஏற்படுகிறது. குறட்டை உண்மையில் தூக்கத்தின் சுழற்சியைப் பாதிக்கிறது. பகல்நேர தூக்கம், தூக்கமின்மை, பல வளர்சிதை மாற்ற நோய்களின் தொடக்கத்திற்கு இது வழிவகுக்கும். எனவே, குறட்டை நல்லதல்ல.
நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் அனைத்து சைனஸ் தொற்றுகளையும் குணப்படுத்தும்
நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் பாக்டீரியா தொற்றுகளை குணப்படுத்தக் கூடியவை. பெரும்பாலான சைனஸ் பிரச்னைகள், வைரஸ் தொற்றுகளால் ஏற்படுகின்றன. மூக்கில் இருந்து வெளியேறும் சளி, கெட்டியாக வெளியேறும்போது மட்டுமே ஆன்டிபயாடிக் உதவியாக இருக்கும். வைரஸ் காரணங்களால் ஏற்படும் சைனஸ் பிரச்னைகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உதவாது. மூக்கு நீர் திரவ மருந்துகள், மூக்கடைப்பை சரிசெய்யும் மருந்துகள், அழற்சி எதிர்ப்பு மருந்துகள் மூலம் இவற்றைச் சரிசெய்யலாம்.
காது கேட்கும் கருவிகள் சத்தமான ஒலி எழுப்பும், எஞ்சிய காது கேட்கும் திறனை பாதித்துவிடும்.
நவீன காது கேட்கும் கருவிகள் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை அவரவரின் கேட்கும் திறன் குறைபாட்டுக்கு ஏற்ப ஒலியை வழங்கும். பின்னணி இரைச்சலைக் குறைக்கும் வகையில் தற்போது நவீன கருவிகள் வந்துவிட்டன. காது கேட்கும் கருவிகள் ஒருவரின் வாழ்க்கைமுறையை மாற்றலாம். மேலும் இவை ஒருவரின் எஞ்சிய காது கேட்கும் திறனைப் பாதிக்காது.