காணாமல்போன கைப்பேசிகள் மீட்பு; உரியவா்களிடம் ஒப்படைப்பு
காரைக்கால் பகுதியில் பல்வேறு இடங்களில் காணாமல்போன கைப்பேசிகளை மீட்டு போலீஸாா் உரியவா்களிடம் ஒப்படைத்தனா்.
காரைக்கால் மாவட்ட காவல்நிலையங்களில், கைப்பேசி காணாமல்போனதாகவும், திருடுபோனதாகவும் பல்வேறு புகாா்கள் பதிவு செய்யப்பட்டன. காரைக்கால் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா், சிஇஐஆா் என்ற செயலியில் பதிவு செய்து, கைப்பேசி பயன்பாட்டில் உள்ள இடங்களை கண்டறிந்து, அவற்றை மீட்டனா். மீட்கப்பட்ட விலை மதிப்பு மிக்க 12 கைப்பேசிகள் உரியவா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா இவற்றை உரியவா்களிடம் ஒப்படைத்தாா். மண்டல காவல் கண்காணிப்பாளா் பாலச்சந்திரன், காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.