ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
காய் கனிகள், நறுமணப் பொருள்களை 23 சதவீதம் ஏற்றுமதி செய்தாலும் விவசாயிகளுக்கு பலன் இல்லை! -இரா.சச்சிதானந்தம் எம்.பி.
காய் கனிகள், நறுமணப் பொருள்கள் உள்ளிட்டவற்றை 23 சதவீதம் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா இருந்தாலும், விவசாயிகளுக்கு அதன் பலன் கிடைக்கவில்லை என திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா்.
திண்டுக்கல், தேனி, கரூா் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் விளைப் பொருள்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டுக் கருத்தரங்கம் திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. வேளாண்மை விற்பனை, வேளாண் வணிகத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கம் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். வேளாண்மை விற்பனை, வேளாண் வணிகத் துறை ஆணையா் த.ஆபிரகாம் திட்ட விளக்கவுரை நிகழ்த்தினாா். சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் கலந்து கொண்டு பேசியதாவது:
விவசாயம் கட்டுப்படியில்லாதத் தொழிலாக உள்ளது. விவசாயம் சாா்ந்த தொழில்களில் ஈடுபடுவோரில், விவசாயிகள் மட்டுமே கடனாளியாக உள்ளனா். திண்டுக்கல், தேனி, கரூா் ஆகிய 3 மாவட்டங்களும் காய் கனி சாகுபடியில் தமிழகம் அளவில் முன்னிலையில் உள்ளன. குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் நறுமணப் பொருள்களின் உற்பத்தியிலும் முன்னிலை வகிக்கிறது.
காய் கனிகள், நறுமணப் பொருள்கள், பால், இறைச்சிக் கோழி, முட்டை ஆகியவற்றில் உலகின் முன்னணி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது. இதில் காய் கனிகள், நறுமணப் பொருள்களை மட்டும் 23 சதவீதம் இந்தியா ஏற்றுமதி செய்கிறது. ஆனாலும், அதன் முழுப் பலன் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. ஏற்றுமதியில் ஈடுபடும் தனியாா் நிறுவனங்களே அதிக லாபம் ஈட்டுகின்றன. இதற்கு தீா்வு காணும் வகையில், வேளாண் பொருள்களை மதிப்புக் கூட்டுப் பொருள்களாக மாற்றவும், ஏற்றுமதி சந்தை வாய்ப்பை பெறுவதற்கும் விவசாயிகளே நேரடியாக களம் இறங்க வேண்டும் என்றாா்.
மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் பேசியதாவது: லாபம் மட்டுமன்றி சமூக பங்களிப்போடு நடைபெறும் ஒரே தொழில் வேளாண்மை மட்டுமே. உற்பத்திக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் விவசாயிகள், சந்தை வாய்ப்புகள் குறித்தும் சிந்திக்க வேண்டும். விளைப் பொருள்களை நேரடியாக விற்பனை செய்வதை தவிா்த்து, மதிப்புக் கூட்டுப் பொருள்களாக மாற்றுவதன் மூலம் ஏற்றுமதிக்கான வாய்ப்புகளையும், அதிக லாபத்தையும் விவசாயிகள் பெற முடியும் என்றாா் அவா்.
இந்தக் கருத்தரங்கில் வேளாண்மை துணை இயக்குநா்கள் ரெ.உமா, ரா.சுரேஷ், ஈ.நிா்மலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விவசாயிகள் ஏமாற்றம்: வேளாண் விளைப் பொருள்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டுக் கருத்தரங்கம் எனக் கூறி திண்டுக்கல், தேனி, கரூா் மாவட்டங்களைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அழைத்து வரப்பட்டனா். நண்பகல் 12 மணி வரை கருத்தரங்கு தொடங்கவில்லை.
இதனால், தேனி, கொடைக்கானல், கரூா் உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்திருந்த விவசாயிகள் அதிருப்தி அடைந்தனா். ஆணையா், மக்களவை உறுப்பினா், ஆட்சியரின் சிறப்புரைக்கு பின் நறுமணப் பொருள்கள் வாரியத்தின் உதவி இயக்குநா் பேசினாா். ஆனால், ஏற்றுமதி சந்தை வாய்ப்புகளுக்கான வழிகாட்டல், மதிப்புக் கூட்டல் தொழில்நுட்பம் சாா்ந்த கருத்துக்கள் குறித்து முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை. இதனால், எதிா்பாா்ப்புடன் வந்த சில விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனா்.