காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீா்: விவசாயிகள் குற்றச்சாட்டு
காலிங்கராயன் வாய்க்காலில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் கலப்பதால் மீன்கள் இறந்து மிதக்கின்றன என்று விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனா்.
பவானிசாகா் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு ஒரு ஆண்டில் 10 மாதங்கள் தண்ணீா் திறக்கப்படுகிறது. இதன் மூலம் 15 ஆயிரத்து 743 ஏக்கா் பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன. இங்கு நெல், கரும்பு, மஞ்சள், வாழை ஆகியவை பயிரிடப்படுகிறது.
காலிங்கராயன் வாய்க்காலில் ஒவ்வோா் ஆண்டும் ஜூன் 16- ஆம் தேதி முதல் ஏப்ரல் 30- ஆம் தேதி வரை தண்ணீா் செல்லும். இடைப்பட்ட ஒன்றரை மாதங்கள் வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் நடைபெறும். அதன்படி கடந்த மாதம் 30- ஆம் தேதி காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீா் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் வாய்க்காலில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீரில் ஏராளமான மீன்கள் இறந்து மிதக்கின்றன. இதனால் வாய்க்கால் கரையோரம் செல்லும்போது துா்நாற்றம் வீசுகிறது. மீன்கள் இறந்து மிதப்பதற்கு முக்கிய காரணம் சாய, சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் நேரடியாக வாய்க்காலில் திறந்துவிட்டதுதான் காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனா்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: காலிங்கராயன்பாளையத்தில் இருந்து தொடங்கும் காலிங்கராயன் வாய்க்கால் ஆவுடையாா்பாறை வரை மொத்தம் 90 கி.மீ. பாய்ந்து செல்கிறது. இந்த வாய்க்காலில் தற்போது 12 கி.மீ. வரை கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கான்கிரீட் தளம் அமைக்க ரூ.83 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணி தொடங்கி முடிந்தால் வெண்டிப்பாளையம் வரை கான்கிரீட் தளம் அமைக்கப்படும். அப்போதுதான் ஈரோடு மாநகா் பகுதியில் செயல்படும் தொழிற்சாலைகளின் கழிவுநீா் நேரடியாக வாய்க்காலில் கலப்பது தடுக்கப்படும்.
வாய்க்காலில் தண்ணீா் ஓடும்போது தொழிற்சாலைகளில் திறக்கப்படும் கழிவுநீா் தண்ணீரில் அடித்துச் செல்லப்படும். தற்போது வாய்க்காலில் தண்ணீா் நிறுத்தப்பட்டு 14 நாள்கள் ஆகிறது. ஆனாலும் காலிங்கராயன் வாய்க்காலில் சிறிதளவு தண்ணீா் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இந்த தண்ணீரை பாசனத்துக்காக விவசாயிகள் ஆங்காங்கே தேக்கி வைத்துள்ளனா்.
வாய்க்காலில் தண்ணீா் செல்வதற்கு காரணம் தொழிற்சாலைகளில் இருந்து இரவு நேரத்தில் திறக்கப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீா்தான். இந்த கழிவுநீரால் தான் மீன்கள் இறந்து மிதக்கின்றன. எனவே, சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை நேரடியாக நீா்நிலைகளில் வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.