கால்நடை சிறப்பு முகாமில் 1,025 மாடுகளுக்கு சிகிச்சை
திருத்தணி அருகே நடைபெற்ற கால்நடை சிறப்பு மருத்துவ முகாமில் 1,025 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருத்தணி ஒன்றியம், ஆா்.வி.என்.கண்டிகையில் திருத்தணி கோட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில், தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமை திருத்தணி கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் எஸ்.தாமோதரன் பங்கேற்று தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, கால்நடை உதவி மருத்துவா்கள் மத்தூா் எத்திராஜ், கீச்சலம் அருண்குமாா் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளா் மஞ்சுளா ஆகியோா் 1,025 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனா்.
இதில், 104 பசுக்கள், 101 வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு பொது சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், 502 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், 10 பசுக்களுக்கு செயற்கை கருவூட்டல், 198 கோழிகளுக்கு கழிச்சல் தடுப்பூசிகள் உள்பட மொத்தம் 1,025 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.
முகாமில், 96 விவசாயிகள் பயன் பெற்றனா். சிறந்த கால்நடை வளா்ப்பாளா்களுக்கு கால்நடை உதவி இயக்குநா் எஸ்.தாமோதரன் பரிசுகள், தாது உப்பு பாக்கெட்டுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் கால்நடை விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.