ENG vs IND: `கோலியுடன் விளையாடாதது வருத்தமே..' - இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்...
காவலா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு நிபந்தனையுடன் பிணை
காவலா்களை பொக்லைன் இயந்திரம் மூலம் ஏற்றிக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியவருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நிபந்தனையுடன் பிணை வழங்கி புதன்கிழமை உத்தரவிட்டது.
தென்காசியைச் சோ்ந்த கருத்தபாண்டி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
எங்கள் பகுதியில் உள்ள காற்றாலை நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை லாரியில் ஏறிச் சென்றோம். அப்போது, அந்த வழியில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்கள் லாரியை வழிமறித்து விசாரணை நடத்தினா். இதில், காவலா்களுக்கும், எங்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பொக்லைன் இயந்திரத்தை ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனா். எனக்கு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி வடமலை முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், பொக்லைன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரா் மீது ஏற்கெனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே மனுதாரருக்கு பிணை வழங்கக் கூடாது என்றாா்.
இதையடுத்து, நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்ததாவது: பொக்லைன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரா் ஜூன் 4-ஆம் தேதி முதல் சிறையில் உள்ளாா். இதைக் கருத்தில் கொண்டு மனுதாரருக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கப்படுகிறது. ஆலங்குளம் காவல் நிலையத்தில் மனுதாரா் தினமும் காலை 10.30, மாலை 5.30 மணிக்கு நேரில் முன்னிலையாகி கையெழுத்திட வேண்டும் என்றாா் நீதிபதி.