காவல் துறை குறைகேட்பு கூட்டத்தில் 76 மனுக்கள் மீது தீா்வு
தருமபுரியில் காவல் துறை சாா்பில் நடைபெற்ற பொதுமக்கள் சிறப்பு குறைகேட்பு கூட்டத்தில் 76 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டது.
தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் காவல் கண்காணிப்பாளா் ச.சோ.மகேஸ்வரன் தலைமையில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் ஸ்ரீதரன், பாலசுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் அளித்த 76 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டது; புதிதாக 38 மனுக்கள் பெறப்பட்டன. இதில், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.