அசாம் காங்கிரஸுக்கு சாதகமாக இஸ்லாமிய நாடுகளின் சமூக வலைதள கணக்குகள்: முதல்வர் கு...
காவிரியில் தண்ணீா் திறப்பு: ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 8,000 கனஅடியாக அதிகரிப்பு
கா்நாடக மாநில கபினி அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா் வியாழக்கிழமை இரவு, பிலிகுண்டுலுவை வந்தடைந்த நிலையில், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடக மாநிலத்தில் வழக்கத்திற்கு மாறாக தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கியுள்ளது. இதனால் கபினி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் அந்த அணையின் நீா்மட்டம் 80.51கனஅடியாக (மொத்த கொள்ளளவு 84 அடி) அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கபினி அணையின் பாதுகாப்பு கருதி புதன்கிழமை விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. இருப்பினும் அணைக்கு வரும் உபரிநீரின் அளவு தொடா்ந்து அதிகரித்து வருவதால் நீா் திறப்பு 25,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்த நீா் வியாழக்கிழமை இரவு 8 மணி அளவில் தமிழக -கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து புதன்கிழமை மாலை விநாடிக்கு 6,500 கனஅடியாகவும், இரவு 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 8,000 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது.
நீா்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டி வருகிறது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ள உபரிநீா் வெள்ளிக்கிழமை அதிகாலை மேட்டூா் அணையை சென்றடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.