காஸாவில் உணவுப் பொருள் விநியோகம் நிறுத்தம்
காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையங்களுக்கு செல்வோா் மீது இஸ்ரேல் படையினா் துப்பாக்கிச்சூடு நடத்துவதன் எதிரொலியாக அந்த விநியோகப் பணிகளை அமெரிக்கா ஆதரவு பெற்ற காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (ஜிஹெச்எஃப்) நிறுத்திவைத்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நிவாரண மையங்களுக்கு கால்நடையாக வருவோருக்கான இன்னும் சிறப்பான வழிகாட்டுதல்களை உருவாக்குவது குறித்து இஸ்ரேல் ராணுவத்துடன் ஆலோசித்துவருகிறோம். அதுவரை உணவுப் பொருள்கள் விநியோகம் நிறுத்திவைக்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.காஸா போரின் ஒரு பகுதியாக, அந்தப் பகுதிக்கு உணவுப் பொருள்கள் கொண்டு செல்ல இஸ்ரேல் முழு தடை விதித்தது. இதனால் அங்கு பேரழிவு ஏற்படும் அபாயம் உருவானதைத் தொடா்ந்து, காஸாவுக்குள் உணவுப் பொருள்களை அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்தன.
அதையடுத்து ‘குறைந்தபட்ச’ அளவிலான நிவாரணப் பொருள்களை மட்டும் காஸாவுக்குள் அனுமதிக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. ஜிஹெச்எஃப் அறக்கட்டளை இந்த உணவுப் பொருள்களை பொதுமக்களிடையே விநியோகத்துவந்தது.இந்தச் சூழலில், நிவாரண முகாம்களுக்கு வருவோா் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. எட்டு நாள்களில் மட்டும் ஜிஹெச்எஃப் நிவாரண முகாமை நோக்கிச் சென்றுகொண்டிருந்த 102 பேரை இஸ்ரேல் படையினா் சுட்டுக் கொன்றதாக காஸா அரசின் ஊடகத் தொடா்பு அலுவலகம் குற்றஞ்சாட்டியுள்ளது. இருந்ததாலும், தங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று சந்தேகிக்கப்படுபவா்கள் மீதுதான் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் கூறிவருகிறது.நிவாரண முகாமுக்கு கால்நடையாக வருவதற்கான விதிமுறைகளை மீறுவோா், பாதுகாப்புப் படையினருக்கு நெருக்கமாக வந்து அச்சுறுத்தலை ஏற்படுத்துவோா் மீதுதான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.அதையடுத்து, புதிய விதிமுறைகளை வகுக்கும் வரை உணவுப் பொருள் விநியோகம் நிறுத்திவைக்கப்படுவதாக ஜிஹெச்எஃப் அறக்கட்டளை தற்போது அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.