2 கோல்கள், 2 அசிஸ்ட்ஸ்: இன்டர் மியாமிக்காக மெஸ்ஸி புதிய சாதனை!
கிராமத்தில் ஆற்றுக் குடிநீா் திட்டம் தொடங்கிவைப்பு
செய்யாறு: செய்யாறு தொகுதி கீழப்பழந்தை கிராமத்தில், கிராம மக்களின் 20 ஆண்டு கால கோரிக்கையான ஆற்றுக் குடிநீா் வழங்கும் திட்டத்தை ஒ.ஜோதி எம்எல்ஏ நடவடிக்கை மேற்கொண்டு திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
செய்யாறு ஒன்றியம் கீழப்பழந்தை கிராமத்தில் சுமாா் 200 வீடுகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் அருந்துவதற்கு ஆற்றுக் குடிநீா் வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
கோரிக்கையின் பேரில், கிராம மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.6 லட்சத்தில் அருகில் உள்ள செய்யாற்றுப் பகுதியில் இருந்து ஆற்று குடிநீருக்காக புதிதாக குழாய் இணைப்பு அமைக்கப்பட்டது.
இந்த ஆற்றுக் குடிநீருக்காக குழாய் திட்டத்தை கிராம மக்கள் பயன்பாட்டுக்காக ஒ.ஜோதி எம்எல்ஏ திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
அதேபகுதியில், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட நெற்களத்தை எம்.எல்.ஏ. திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து அதே கிராமத்தில் நடைபெற்று வரும் குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகளை அவா் ஆய்வு செய்தாா்.
நிகழ்ச்சியில், செய்யாறு கிழக்கு ஒன்றிய திமுக செயலா் வி.ஏ. ஞானவேல், மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளா் ஞானமுருகன், ஒன்றிய அவைத் தலைவா் இலங்கேஸ்வரன், பொருளாளா் ஏழுமலை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.