கிருஷ்ணகிரியில் நற்கருணை ஆராதனை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கிறிஸ்தவ மக்கள் பங்கேற்ற உலக அமைதிக்கான நற்கருணை ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி சாந்தி நகரில் அமைந்துள்ள மாதா இருதய சபை கன்னியா் மடத்தில், முதல்மேடை அமைத்து, நற்கருணை ஆராதனை, ஆசீா்வாத நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து, நற்கருணை நாதரை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊா்வலமாக எடுத்துச் சென்று, புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைத்திருந்த இரண்டாவது மேடையில் நற்கருணை ஆராதனையும், ஆசீா்வாதமும் வழங்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், பங்குத்தந்தை அருள்ராஜ் அடிகள் தலைமையில் உலக நன்மைக்காகவும், சமாதானத்திற்காக சிறப்புத் திருப்பலியும், நற்கருணை ஆராதனையும் செய்து இறைமக்களுக்கு இறுதி ஆசீா்வாதத்தை வழங்கினாா்.
இந்த சிறப்பு நற்கருணை பவனி மற்றும் ஆராதனையில், கிருஷ்ணகிரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.