ஆபரேஷன் சிந்து: முதன்முதலாக இஸ்ரேலில் இருந்து 161 இந்தியர்கள் மீட்பு!
'ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இஸ்ரேலில் இருந்து முதல்முறையாக 161 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல்-ஈரான் மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் சிந்து' என்ற பெயரில் மத்திய அரசு மீட்பு நடவடிக்கையை கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது.
முதல்கட்டமாக அன்றைய தினமே 110 இந்தியர்கள் ஈரானில் இருந்து மீட்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, ஈரானில் தங்கியுள்ள இந்திய மாணவர்கள் மற்றும் குடிமக்களைப் பாதுகாப்பாக மீட்பதற்காக வான்வெளி கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிப்பதுடன் மூன்று விமானங்கள் மூலம் 1,000 இந்தியர்களை மஷாத் நகரில் இருந்து இந்தியாவுக்கு அனுப்புவதாக ஈரான் தெரிவித்தது.
இதையடுத்து, 290 இந்தியர்களுடன் முதல் விமானம் ஈரானில் இருந்து 20-ஆம் தேதி புது தில்லி வந்தடைந்தது. 310 இந்தியர்களுடன் இரண்டாவது விமானமும் மற்றொரு விமானமும் சனிக்கிழமை வந்தடைந்தது.
மஷாத் நகரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 292 இந்தியர்கள் இன்று(ஜூன் 24) புதுதில்லி வந்தடைந்தனர். இதுவரை ஈரானில் இருந்து 2,295 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
ஈரானுடனான மோதலைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக இஸ்ரேல் தனது வான்வெளியை மூடியது. விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மேற்கொண்ட முயற்சியின் மூலம் இஸ்ரேலில் இருந்து ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின்கீழ் முதல்முறையாக இந்தியர்களை மீட்கும் பணி தொடங்கப்பட்டு முதல் விமானம் மூலம் 161 பேர் இன்று(ஜூன் 24) புதுதில்லி வந்தடைந்தனர்.
இஸ்ரேலில் இருந்து முதல்கட்டமாக மீட்கப்பட்டுள்ள 161 இந்தியர்களும் சாலை வழியாக இஸ்ரேல்-ஜோர்டான் எல்லைக்கு அழைத்து வரப்பட்டு, அங்கு நுழைவுஇசைவு (விசா) உள்பட பயணம் மேற்கொள்வது தொடர்பான நடைமுறைகள் நிறைவடைந்த பின்பு அவர்கள் ஜோர்டான் தலைநகர் அம்மானில் உள்ள விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அம்மானில் இருந்து அவர்கள் தாயகம் திரும்புவதற்காக சிறப்பு விமானங்களை செய்யப்பட்டு சிறப்பு விமானங்கள் மூலம் 161 இந்தியர்கள் புதுதில்லி வந்தடைந்தனர்.
இதையும் படிக்க: போர் நிறுத்தமா..? இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்!