கிரைம் திரில்லர் படத்தில் தான்யா ரவிச்சந்திரன்!
நடிகை தான்யா ரவிச்சந்திரன் கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள 'றெக்கை முளைத்தேன்' படத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
'சுந்தரபாண்டியன்' திரைப்படத்தில் கிராமத்து நட்பு, 'இது கதிர்வேலன் காதல்' படத்தில் நகைச்சுவை மற்றும் காதல், 'சத்ரியன்' படத்தில் ஆக்ஷன், 'கொம்பு வெச்ச சிங்கம்டா' படத்தில் கிராமத்து வீரம் மற்றும் 'செங்களம்' இணையத் தொடரில் அரசியல் ஆழம் எனப் பல்வேறு வகைப் படைப்புகளில் முத்திரை பதித்த இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன், 'றெக்கை முளைத்தேன்' படத்தின் மூலம் இன்னுமொரு புதிய களத்தில் புகுந்துள்ளார்.
இது வரை அவர் செய்த படங்களிலேயே முற்றிலும் மாறுபட்ட விறுவிறுப்பான கிரைம் திரில்லர் பாணியில் 'றெக்கை முளைத்தேன்' படத்தை எழுதி, இயக்கி இருப்பதோடு தனது ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்தும் உள்ளார்.
தான்யா ரவிச்சந்திரன், பிரபா, குருதேவ், நித்திஷா, மெர்லின், ஜெய்பிரகாஷ், 'ஆடுகளம்' நரேன், கஜராஜ், மீராகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீ ரஞ்சனி உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

'றெக்கை முளைத்தேன்' படம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்ட இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன், "இத்தகைய படங்களைத் தான் இவர் எடுப்பார் என்ற சுழலில் சிக்காமல் ஒவ்வொரு படத்திலும் புதிதாக முயற்சிக்க வேண்டும் என்ற எனது லட்சியத்தின் வெளிப்பாடு தான் 'றெக்கை முளைத்தேன்'.

கல்லூரியில் சேர்ந்த உடன் புதிய சிறகுகள் கிடைத்தாக உணரும் மாணவர்கள் ஒரு புறம், அதிரவைக்கும் குற்றத்தை விசாரிக்கும் காவல் அதிகாரியாக தான்யா ரவிச்சந்திரன் மறுபுறம் என்று தொடக்கம் முதல் இறுதி வரை பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத வகையில் இப்படம் இருக்கும்," என்றார்.
'றெக்கை முளைத்தேன்' படத்திற்கு தரண்குமார் பின்னணி இசை அமைக்க, கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிஜு வி. டான்போஸ்கோ கையாளுகிறார். பாடலுக்கான இசையை தீசன் வழங்கி உள்ளார்.
'றெக்கை முளைத்தேன்' திரைப்படம் கிரைம் திரில்லர் பாணியில் புதிய தடத்தை பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.