கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்
சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக சமீபத்தில் அதிகளவில் புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், மதுராந்தகம் - மேல்வருவத்தூர் இடையே நடக்கும் பாலப் பணிகளால்தான், சென்னைக்கு பேருந்துகள் வருவதில் தாமதம் ஏற்பட்டு, கிளாம்பாக்கத்தில் பயணிகளின் கூட்டத்துக்கு காரணம் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் பதிலளித்துள்ளது.
சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்று அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு 9 மணிக்குமேல் மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், தூத்துக்குடி, தேவக்கோட்டை, புதுக்கோட்டை, திருக்கோவிலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால், சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ச்சியுற்றனர்.
இதனால், நள்ளிரவு 1 மணியளவில் 1,000-க்கும் மேற்பட்டோர் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். திடீர் சாலை மறியலால், நெடுஞ்சாலையில் இருபுறமும் 3 கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டோருடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சிங்கப்பெருமாள் கோயிலில் திருவிழா நடைபெற்று வருவதுடன், இரவில் பெருமாள் வீதியுலா வருவதால்தான், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டு, திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லை அனுமதித்ததால்தான் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாக காவல்துறையினர் விளக்கமளித்தனர்.