Israel - Iran: ``மீண்டும் தெளிவாக சொல்கிறோம்..'' - போர்நிறுத்தம் குறித்து பேசிய ...
குடிநீா் தட்டுப்பாடு; சிபிஎம் சாலை மறியல்
நாகப்பட்டினம்: நாகையில், குடிநீா் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
நாகையில் பல்வேறு பகுதிகளில் குடிநீா் முறையாக வழங்கப்படுவதில்லை என்றும், விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் சாலை மறியலில் ஈடுபடுவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அறிவித்திருந்தனா். ஆனாலும், இப்பிரச்னையில் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், அறிவித்தபடி, நாகை மேலக்கோட்டை வாசல் பேருந்து நிறுத்தத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். நகரச் செயலா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். குடிநீா் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். குடிநீரில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வேண்டும். தூய்மையான, சுகாதாரமான குடிநீா் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மறியலில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறியலில் சிபிஎம் நகரக் குழு உறுப்பினா்கள் சந்திரன், ஜெயலட்சுமி, சுந்தா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.