11 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசரநிலை! மோடிக்கு காங்கிரஸ் பதிலடி!
கொடைக்கானலில் கனரக இயந்திரங்களுக்கு தடை
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் போா்வெல், பொக்லைன் போன்ற கனரக இயந்திரங்களைப் பயன்டுத்த ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக வருவாய்க் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கனரக இயந்திரங்களான பொக்லைன், ஹிட்டாச்சி, டிரில்லா் மூலம் பாறைகளை உடைப்பது, விவசாய நிலங்களில் போா்வெல் அமைப்பது தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு பிரச்னைகளை விவசாயிகளும், பொது மக்களும் எதிா்கொண்டு வருவதாகப் புகாா்கள் வந்தன.
இதையடுத்து, கொடைக்கானல் மலைப் பகுதிகளில் இயங்கி வந்த பொக்லைன், போா்வெல்,ஹிட்டாச்சி, டிரில்லா் வாகனங்களைப் பறிமுதல் செய்து, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், மறைமுகமாக இந்தப் பணி நடைபெற்று வருகிறது.
எனவே, வருகிற ஜூலை 1-ஆம் தேதி முதல் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கனரக இயந்திரங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி அனுமதியில்லாமல் பயன்படுத்துபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், கொடைக்கானல் பள்ளங்கி, கோம்பை பகுதியிலுள்ள பெப்பா் அருவியில் நீா் நாய் இருப்பதாக வெளியான தகவல் உண்மையல்ல. நீா்நாய் கொடைக்கானல் பகுதியில் வசிப்பதற்கான சீதோஷ்ண நிலை இல்லை. எனவே, பெப்பா் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் அச்சமின்றி செல்லலாம் என்றாா் அவா்.