கொடைக்கானலில் மக்கள் குறைதீா் முகாம்
கொடைக்கானலில் மக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது
கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு கோட்டாட்சியா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். வட்டாட்சியா் பாபு முன்னிலை வகித்தாா்.
இந்த முகாமில், மேல்மலை, கீழ்மலைப் பகுதிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பேசியதாவது:
மக்கள் குறைதீா்க் கூட்டத்தில் விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துத் தீா்வு காண வேண்டும். கொடைக்கானல், கவுஞ்சி, தாண்டிக்குடி உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும். நகராட்சி தினசரி காய்கறிச் சந்தையை திறக்க வேண்டும்.
கொடைக்கானல், தாண்டிக்குடி பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விவசாய நிலங்களில் வன விலங்குகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவதை வனத் துறையினா் தடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தாண்டிக்குடி பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. எனவே, இங்குள்ள மின்வாரிய அலுவலகத்தில் போதிய பணியாளா்களை நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.
பின்னா், விவசாயிகள் கோரிக்கை மனுவை வருவாய்க் கோட்டாட்சியரிடம் அளித்தனா்.