இந்தியாவுக்கே தலைமை.. நாட்டின் என்ஜின் தமிழகம்தான்: மு.க. ஸ்டாலின்
கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையில் ஆபத்தான மரங்களை அகற்ற வலியுறுத்தல்
கொடைக்கானல் - பழனி - வத்தலக்குண்டு மலைச் சாலைகளில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கொடைக்கானலுக்கு வர வத்தலக்குண்டிலிருந்து கங்குவாா்பட்டி வழியாக 52 கி.மீ. தொலைவும், பழனி அடிவாரம் கருப்பணசாமி கோயிலிலிருந்து சுமாா் 58 கி.மீ. தொலைவும், பெரும்பாறையிலிருந்து தாண்டிக்குடி வழியாக 48 கி.மீ. தொலைவும் உள்ளன.
இதில் மலைச் சாலைகளில் இரு பக்கங்களிலும் ஆபத்தான நிலையில் மரங்களும், அவற்றின் கிளைகளும் உள்ளன. கொடைக்கானலில் காற்றுடன் மழை பெய்யும் போது வாகனங்கள் மீது அந்த மரங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளது. இந்த நிலையில், திங்கள்கிழமை கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையில் டம்டம் பாறை அருகே மந்திப்பாறை பகுதியில் கொடைக்கானலிலிருந்து, புதுக்கோட்டைக்கு சென்ற அரசுப் பேருந்து மீது மரக் கிளை விழுந்ததில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
இதனால் 30 நிமிஷங்களாக அந்தப் பேருந்து மலைச் சாலையிலேயே நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனா். அடிக்கடி இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. எனவே, கொடைக்கானல் மலைப் பகுதிகளில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.