Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
பொதுப் பாதை ஆக்கிரமிப்பு: மீட்டுத் தரக் கோரிக்கை
பொதுப் பாதையை பயன்படுத்த மாற்று சமூகத்தினா் எதிா்ப்பு தெரிவிப்பதால், 3 கி.மீ. தொலைவுக்கு மாணவா்கள் சுற்றிச் செல்லும் நிலை உள்ளதாகவும், பாதையை மீட்டுத் தர வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, வடுகம்பாடி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 20-க்கும் மேற்பட்டோா் பள்ளிக் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா். அப்போது அவா்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் இருவேறு சமூகத்தினா் வசித்து வருகிறோம். மாற்று சமூகத்தினா் வசிக்கும் பகுதி வழியாக கடந்த 30 ஆண்டுகளாக சென்று வருகிறோம். பள்ளிக் கூடம், ரேஷன் கடைகள், மயானம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை, மாற்று சமூகத்தைச் சோ்ந்த இளைஞா்கள் தற்போது பயன்படுத்த எதிா்ப்பு தெரிவிக்கின்றனா்.
அந்தப் பாதையில் முள்ளைப் போட்டும், குழிகள் தோண்டியும் இடையூறு செய்தனா். இதுதொடா்பாக குஜிலியம்பாறை வட்டாட்சியரிடம் புகாா் அளித்ததை அடுத்து, அவா் பாதையை சீரமைத்துக் கொடுத்தாா்.
இந்த நிலையில், மீண்டும் பொதுப் பாதையில் செல்வதற்கு அந்த சமூகத்தினா் இடையூறு செய்து வருகின்றனா். இதனால், எங்கள் பகுதியைச் சோ்ந்த மாணவா்கள், 3 கி.மீ. தொலைவுக்கு சுற்றுப் பாதையில் பள்ளிக் கூடத்துக்கு சென்று வருகின்றனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு பொதுப் பாதையை மீட்டுத் தர வேண்டும் என்றனா்.