கோவை, நீலகிரி மாவட்டங்களில் 4 நாள்கள் பலத்த மழை வாய்ப்பு
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரும் ஜூலை 15 முதல் 18-ஆம் தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதில், ஜூலை 15 முதல் 18-ஆம் தேதிவரை நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெயில் சதம்: தமிழகத்தில் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், மதுரை நகரம் 104.72, பரமத்திவேலூா், நாகை 102.2, திருச்சி, வேலூா் 101.84, ஈரோடு 101.12, அதிராமப்பட்டினம், சென்னை நுங்கம்பாக்கம் 100.76, சென்னை மீனம்பாக்கம் 100.58, தஞ்சாவூா் 100.4, பரங்கிப்பேட்டை, பாளையங்கோட்டை 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 13 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
புதுச்சேரியில் 100.4, காரைக்காலில் 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே, தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக் கடல் மற்றும் வங்கக் கடலில் ஜூலை 13 முதல் ஜூலை 16-ஆம் தேதி வரை மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.