மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!
சட்டவிரோதக் குடியேற்றம்: பள்ளி நண்பர்களின் கேலியால் சிறுமி தற்கொலை!
சட்டவிரோதக் குடியேற்ற நடவடிக்கைக்கு பயந்து அமெரிக்க பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோஸ்லின் ரோஜோ கரன்ஸா என்ற பதினொரு வயது சிறுமி, அமெரிக்காவில் டெக்ஸாஸ் நகரில் இடைநிற்றல் பள்ளியில் பயின்று வந்தார். இந்த நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக அமெரிக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் ரோஜோவும் சிக்கக் கூடும் என்று அவரது பள்ளி நண்பர்கள் கடந்த சில நாள்களாகவே கேலி செய்து வந்துள்ளனர். மேலும், அவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், ரோஜோவின் தாயாரைப் பிரிந்து ரோஜோ மட்டும் வாழ நேரிடும் என்று அச்சுறுத்தலுடன் கேலி செய்துள்ளனர்.
இந்த நிலையில், பள்ளி நண்பர்களின் கேலிக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளான ரோஜோ தற்கொலைக்கு முயன்றார். இருப்பினும், ரோஜோ தற்கொலைக்கு முயன்ற 5 நாள்களுக்கு பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிக்க:எஃப்பிஐ இயக்குநரான காஷ் படேல்... ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம்ப் உதவியாளர் வாழ்த்து!
பள்ளி நண்பர்களின் கேலி மற்றும் அச்சுறுத்தலால்தான் ரோஜோ தற்கொலை செய்தார் என்பது அவரின் தாயாருக்கு தெரியாது. இதனிடையே, ரோஜோவின் தற்கொலைக்கான காரணம் குறித்து புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பள்ளி நண்பர்களின் கேலி குறித்து பள்ளி நிர்வாகத்திடம் ரோஜோ புகார் அளித்ததும், புகாரின்மேல் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், ரோஜோவின் புகார் குறித்து ரோஜோவின் தாயாருக்கு பள்ளி நிர்வாகம் தகவலும் அளிக்கவில்லை என்பது புலனாய்வாளர்களின் விசாரணையில் தெரிய வந்தது.
அதுமட்டுமின்றி, ரோஜோ வீட்டில் எப்போதும்போல நடந்து கொண்டதாகவும், பள்ளியில் நடப்பது குறித்து எதுவும் கூறவில்லை என்றும் அவரது தாயார் கூறினார்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].