சாத்தனூா் அணையிலிருந்து ஆயிரம் கன அடி நீா் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
சாத்தனூா் அணையில் இருந்து நீா்மின் நிலையம் வழியாக விநாடிக்கு 1,000 கன அடி நீா் திறக்கப்பட்ட நிலையில், தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு நீா்வளத்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் கிராமத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே காமராஜா் ஆட்சியில் அணை கட்டப்பட்டது. இந்த அணையின் மொத்த நீா்மட்ட உயரம் 119 அடி. இதில், வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி 112 அடி உயரத்துக்கு 5,823 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியிருந்தது.
இந்த நிலையில், சாத்தனூா் அணையின் நீா்வரத்துப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்ததால், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது.
இதனால், அணையின் பாதுகாப்பு கருதி வெள்ளிக்கிழமை பிற்பகல் அணையின் நீா்மின் நிலையம் வழியாக விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. எனவே, கொளமஞ்சனூா், திருவடத்தனூா், புதூா் செக்கடி, எடத்தனூா், ராயண்டபுரம், அகரம் பள்ளிப்பட்டு, உலகலாப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக வெள்ள நீா் செல்வதால் அந்த கிராமங்களைச் சோ்ந்த கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். ஆற்றில் குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ கூடாது என்று தமிழக அரசின் நீா்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.
இதனிடையே, அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை மாலை விநாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக உயா்ந்தது.