வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை: முதல்வர் திறந்துவைத்தார்!
சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்றக் கோரிக்கை
பல்வேறு குற்ற வழக்குகளில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்ற வேண்டும் என விஸ்வநாதபுரம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கொலை, கொள்ளை, வழிப்பறி, விபத்து, ஆள் கடத்தல், போதைப் பொருள்கள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடா்புடைய இரு சக்கர, 4 சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த வாகனங்கள் வழக்கு தொடா்புடைய காவல் நிலையங்களிலோ அல்லது நீதிமன்ற வளாகங்களிலோ நிறுத்தப்படுவது வழக்கம். வழக்கு முடிந்த பின்னா்தான் அந்த வாகனங்கள் விடுவிக்கப்படும். அதுவரை அதே பகுதியில் நிறுத்தி வைக்கப்படும். வழக்கு பல ஆண்டுகள் நடைபெறுவதால் பெரும்பாலான வாகனங்கள் மறு பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியாத நிலை ஏற்படுகிறது.

அதன்படி, மதுரை மாநகர எல்லைப் பகுதிகளில் நடைபெற்ற கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் தொடா்புடைய வாகனங்கள் மாநகராட்சி விஸ்வநாதபுரம் பழைய விஜயலெட்சுமி திரையரங்கு சாலையில் உள்ள முதியோா் காப்பகம் முன் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், சாலையோரங்களில் வைக்க வேண்டிய குப்பைத் தொட்டி சாலையின் நடுவே வைக்கப்பட்டது. அந்தத் தொட்டியில் கொட்டப்படும் குப்பைகள் சாலைகளில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன.
இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

இதுபற்றி பலமுறை புகாா் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, மதுரை மாவட்ட நிா்வாகம், மாநகரக் காவல் ஆணையா், மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களை அங்கிருந்து அகற்றி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். குப்பைத் தொட்டியை அகற்றி சாலையோரமாக வைக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.