ஈரான் தாக்குதல் எதிரொலி: வளைகுடா நாடுகளுக்கு 11 விமானங்கள் ரத்து!
சாலை விபத்தில் கணவா் உயிரிழப்பு: மனைவி காயம்; குழந்தை தப்பியது
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மனைவி கண் எதிரே கணவா் உயிரிழந்தாா். காயமடைந்த மனைவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே குருசாமிபாளையம் பிள்ளாநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் எலக்ட்ரீசியன் ஹரிகிருஷ்ணன் (25). இவா் தனது மகன் பிறந்தநாளையொட்டி, மனைவி ஸ்வேதா (22), மகன் பிரகதீஸ்வரன் (3) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் காளிப்பட்டி கோயிலுக்கு சென்றாா். கண்டாங்கிபாளையம் பிரிவு சாலை அருகே சென்றபோது, எதிரே மல்லசமுத்திரத்தில் இருந்து வந்த ஆம்னி வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டதில், ஹரிகிருஷ்ணன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், காயமடைந்த ஸ்வேதாவை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தகவல் அறிந்து வந்த எலச்சிபாளையம் போலீஸாா், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய ஆம்னி வேன் ஓட்டுநரை தேடி வருகின்றனா்.
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்வேதா, மேல் சிகிச்சைக்காக ராசிபுரம் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். நல்வாய்ப்பாக குழந்தை பிரகதீஸ்வரனுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.