தூத்துக்குடி: நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு
சின்ன திரையிலிருந்து விலகியது ஏன்? காவ்யா அறிவுமணி விளக்கம்!
சின்ன திரைத் தொடர்களில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து நடிகை காவ்யா அறிவுமணி விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் (முதல் பாகம்) தொடர் மூலம் புகழ் பெற்ற நடிகை காவ்யா அறிவுமணி, 3 படங்களில் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது கவின் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தில் நடித்துவருகிறார்.
2022-ல் மிரள் படத்தில் ஹேமா என்ற பாத்திரத்தில் நடித்த காவ்யா, 2023ஆம் ஆண்டு ரிப்பப்பரி என்ற படத்தில் பாரதி என்ற பாத்திரத்தில் நடித்து அசத்தினார். இந்த இரு படங்களைத் தொடர்ந்து நிறம் மாறும் உலகில் படத்தில் நட்டிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
கட்டட வடிவமைப்புப் பொறியியல் பட்டதாரியான இவர், தற்போது சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்துவரும் நிலையில், சின்ன திரையில் இருந்து விலகியது ஏன்? என்ற காரணத்தைப் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள காவ்யா,
''பலரைப் போல மிகப்பெரிய கனவுகளுடன் இருக்கும் நடுத்தரக் குடும்பத்துப் பெண்தான் நான். சிறிய வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்பதில் தீராத ஆசை. பள்ளி நாள்களில் மேடைகளில் நடித்து கைதட்டல்களைப் பெற்றதுதான் எனக்கு கிடைத்த ஆரம்பகட்ட ஊக்கம்.
பதின்ம வயதில் இதற்கான முயற்சியாக, சொந்த ஊரான ஆம்பூரில் இருந்து சென்னைக்கு வந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு சினிமா வாய்ப்பு தேடி அலைந்தேன். ஆனால், சில யூடியூப் சேனல்களில் மட்டுமே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர்தான் பாரதி கண்ணம்மா தொடரின் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. அதன்பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்தேன்.
சின்ன திரையில் நடித்துவந்தாலும், சினிமாவில் ஸ்டார் ஆக வேண்டும் என்பதுதான் எனது கனவு. ஆனால் என்னுடைய இரு சகோதரிகளின் கல்விச் செலவை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் நான் இருந்தேன். எனது குடும்பமும் என் வருவாயையே நம்பியிருந்தது.
அதனால், உத்திரவாதமான வருவாய் அளித்துவரும் சின்ன திரையை அவ்வளவு எளிதில் விட்டுவிட முடியவில்லை. சினிமாவுக்குச் செல்ல வேண்டியவள் நான், குடும்பத்துக்காக சின்ன திரையிலேயே இருந்துவிடுவேனோ என பல நாள்கள் ஏங்கியிருக்கிறேன். பல இடங்களில் நிராகரிப்பை மட்டுமே சந்தித்தேன்.

சின்ன திரைக்கும் இதேதான் நடந்தது. முதல் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு பல நிராகரிப்புகள் நடந்துள்ளன. இதேதான் சினிமாவுக்கு நடக்கிறது என என்னை நானே தேற்றிக்கொள்வேன்.
பணத்திற்காக வேலை செய்யக் கூடாது; திருப்திக்காக வேலை செய்ய வேண்டும் என்பதை நான் உணர்ந்துகொண்டேன். அதனால், சின்ன திரையில் விலகும் மிகப்பெரிய முடிவை நான் எடுத்தேன். என் முடிவு குடும்பத்தை எவ்வாறு பாதிக்கும் என்ற கவலையை விட, நிச்சயமாக சினிமாவில் நடிகையாகிவிடுவேன் என்ற நம்பிக்கை மட்டுமே அதிகம் இருந்தது.
இன்றும் கூட நான் ஆடிஷன்களுக்குச் செல்வதுண்டு. சினிமாவிலும் நடிகையாவிட்டோமே இனியும் ஏன் ஆடிஷன்களுக்குச் செல்ல வேண்டும் என நான் ஒருபோதும் நினைத்தது இல்லை'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | நடிப்புக்கு உயரம் தடையா? தாமதமாகும் வாய்ப்பு குறித்து குஷ்பு மகள் உருக்கம்!
இதையும் படிக்க | இளம் நடிகைக்குத் தாலி கட்டிய எஸ்.வி. சேகர்! ரசிகர்கள் விமர்சனம்!