சிறார்கள் ஊக்க பானங்கள் அருந்தத் தடையா? பஞ்சாப் அரசு ஆலோசனை!
சிறார்கள் ஊக்க பானங்கள் அருந்தத் தடை விதிப்பதற்கு பஞ்சாப் அரசு ஆலோசனை நடத்தி வருகின்றது.
இந்தியாவில் ஊக்க பானங்களை வயது வித்தியாசமின்றி அனைத்து வயதினரும் அருந்துகின்றனர். அதில் இருக்கும் அதிகளவு கஃபீன் மற்றும் டாரைன் எனப்படும் ரசாயனங்கள் உடலுக்கு கேடு விளைவிப்பதாகும்.
சிறார்கள் பலரும் இத்தகைய பானங்களுக்கு அதிகளவில் அடிமையாகி வருகின்றனர். இந்த பானங்களில் கஃபீன் அளவு அனுமதிக்கப்பட்டதைவிட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. எனவே, உடலுக்கு கேடு தரும் ஊக்க பானங்களை சிறார்கள் அருந்த தடை விதிக்க பஞ்சாப் மாநில அரசு ஆலோசனை நடத்துவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான ஒப்புதலை அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பல்பீர் சிங் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இதன்படி, பள்ளிகளில் உள்ள கேண்டீன்கள், பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் ஊக்க பானங்கள் விற்க தடை விதிக்கப்படும்.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் முன் இந்தத் தடை சட்டப்பூர்வமாக ஏற்கத்தக்கதா என பஞ்சாப் அரசு ஆலோசனை நடத்தி வருகின்றது. இது நடைமுறைக்கு வந்தால் முதன்முதலாக இப்படியான தடை உத்தரவை கொண்டுவந்த மாநிலமாக பஞ்சாப் இருக்கும்.
பல நாடுகளில் 15 வயதிற்குட்பட்டவர்கள் ஊக்க பானங்களை அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாபில் போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஊக்க பானங்கள் மீதான தடைக்கு அமைச்சர் பல்வீர் சிங் ஆலோசித்து வருகிறார்.
சமீபத்தில் பள்ளிகளில் சோதனை நடத்திய அவர் அங்கு மாணவர்கள் பலரும் ரூ. 20 மதிப்பிலான ஊக்க பானங்களைத் தொடர்ந்து அருந்துவதைப் பார்த்தார். மேலும், ஸ்ட்ராபெர்ரி குயிக் எனப்படும் மிட்டாய்களை அவர்கள் தொடர்ந்து உட்கொள்வதையும் அறிந்துகொண்டார்.
இதுகுறித்துப் பேசிய அவர், ”சந்தைகளில் விற்பனையாகும் சில ஊக்க பானங்களில் அதிகளவு காஃபீன் உள்ளன. இதனால், இதயம் சார்ந்த பிரச்னைகள், பதற்றம், வாயு தொல்லை, ரத்த நாளங்களில் பிரச்னை போன்றவை ஏற்படும்.
உலக சுகாதார அமைப்பு 18 வயதுகுட்பட்டவர்கள் இத்தகைய ஊக்க பானங்களை அருந்துவதற்கு எதிராக சில வழிகாட்டுதல்களைக் குறிப்பிட்டுள்ளனர். பள்ளிப் பருவத்தில் இருந்தே இதுபோன்ற பழக்கங்களுக்கு மாணவர்கள் அடிமையாவதைத் தடுக்க ஊக்க பானங்கள் விற்பனைக்கு தடை விதிப்பதை அரசு உறுதி செய்யும்” என்று அவர் தெரிவித்தார்.