செய்திகள் :

சிறு கவனக் குறைவு இப்படியோர் சீரழிவைத் தருமென நினைக்கவில்லை! - மகனின் மன்னிப்பு | #உறவின்கடிதம்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

அவையத்து முந்தியிருக்கச் செய்த தந்தைக்கு,என் நோற்றான் கொல் எனும் சொல் என்று சமூகம் சொல்ல முடியாத படிக்கு  ஆளாகி விட்ட தனயனின் மன்னிப்பு மடல்.

அப்பா!...எதிர்பாரா உன் மரணம் என் சகலத்தையும் ஸ்தம்பிக்க வைத்து என்னுள் ஏற்றி வைத்த மனப்பாரம் மிக அதிகம். அதை  சற்றே இறக்கி வைத்து இளைப்பாறக் களம் அமைத்துக் கொடுத்த விகடனின் இத்தளம் மூலம் இதோ எழுதுகிறேன் உனக்கான  மன்னிப்பு கடிதம்...இதை நீ எப்போதும் படிக்கப் போவதில்லை  என அறிந்திருந்தும்!...

சென்னை,2023 ஆம் ஆண்டின் டிசம்பர் மாத அடை மழைக்  காலத்தின் ஓர் இரவு. பகல் முழுவதும் விடாது பெய்த  மழையினால் மாநகரம் முழுதும் வெள்ளப்பெருக்கு மற்றும் மின்வெட்டு.

இரவு உணவை முடித்து விட்டு நீ , அபார்ட்மெண்டின் ஓர்  அறையில் உறங்கப் போனாய். மற்றோர் அறையில் நானும் உறங்கப் போனேன், அடுத்த நான்கு நாட்களில் காலம் என்னை ஓர் மீளாப் பெருந்  துயருக்குள் மிச்சமிருக்கும் என் வாழ்நாள் முழுமைக்கும் தள்ளப் போவதை அறியாமல்!

மறுநாள் பொழுது புலரும் போதே உனக்கு கடும் தலைவலி  மற்றும் காய்ச்சல் என்றாய். மழையின் தாக்கமாக இருக்குமோ என எண்ணிக் கொண்டு  அருகிலிருந்த மருத்துவரிடம் சென்றோம். மருத்துவர் கொடுத்த வீரியமிக்க மருந்துகளினால் தலைவலி  மற்றும் காய்ச்சல் குறைந்து விட்டதாக நீ கூறினாலும், வயிறு  கடுமையாக வலிக்கிறது என்றாய்.

ஸ்கேன் செய்து பார்த்ததில்,சீரண மண்டலத்தின் சுரப்பு நீர் குடலில் ஏற்பட்ட துளை மூலம் வெளிவந்து விட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள்.

கடும் அதிர்ச்சி எனக்கு ! நடை உடையாய் சுறுசுறுப்பாக இருந்தவரின் உடலில் எப்படி ஏற்பட்டது இந்த திடீர் ரசவாத மாற்றம்?அப்போது தான் எனக்கு உரைத்தது உன் குடல் நைந்து தன் செயல்பாட்டை நிறுத்தியதற்கு காரணம் பணி செய்த காலங்களில் வருடக் கணக்கில் வெளியில் சாப்பிட்டதும், உன்னுடல் மேல் சிறிதும் அக்கறையின்றி செய்த தனிப்பப்பட்ட பழக்க வழக்கங்களும் என்று!

சற்றும் தாமதிக்காமல் இந்நோய்க்கென்றே இருந்த ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையில் உனக்கான அறுவை சிகிச்சை கிட்டத்தட்ட 3-4 மணி நேரம் செய்யப்பட்டது.

ஸ்கேன் செய்ததற்கும்,அறுவை சிகிச்சைக்கும் இடைப்பட்ட நேரத்தில் வலியால் நீ துடிதுடித்துக் கதறிய அந்நினைவலைகளின் சலனம் எந்நாளும் என் எண்ணத்திலிருந்து நீங்காது!

வெளியில் வந்த அறுவை சிகிச்சை நிபுணர் என்னிடம்,அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும்,2 நாட்கள் கழித்து தான் உறுதியளிக்க முடியும் என்று கூறி விட்டுச் சென்றார். 68 வயதிலும் உன் உடலில் இணை நோய்கள் எதுவும் இணையாத காரணத்தால் நான் அசுர நம்பிக்கையிலிருந்தேன் எப்படியும் தேறி வந்து விடுவாய் என்று!

ஆனால், அந்நம்பிக்கை அவநம்பிக்கையானது மறுநாள் ஐ.சி.யு விலிருந்து வந்த அழைப்பின் மூலம்.

ஆம்!

உன் உடல் எந்த மருந்துக்கும் ஒத்துழைக்க மறுக்கிறது.ஆதலால்,உறவினர்களுக்குத் தெரியப்படுத்தி விடுங்கள் என்றார்கள் ஐ.சி.யுவில். நான் விடாப் பிடியாய் டிரீட்மென்ட்டைத் தொடரச் சொல்லி விட்டு ஓய்வறையில் வந்தமர்ந்து கண்களை மூடினேன். வாழ்ந்த வாழ்க்கை நிழலாடியது மனத் திரையில்!

வாய்ப்பு வசதிகளற்ற அச் சிற்றூரில் உனக்குப் பிறந்த மூன்று பிள்ளைகளில் மூத்த பிள்ளை நான்.பாசத்தையும் எதையும் சரிவிகிதத்தில் மூவருக்கும் அளித்தாலும், அச் சரிவிகிதத்தில் சிறு சதவிகிதம் நீ எனக்கு அதிகமாக வழங்கியதைப் பல தருணங்களில் கண்டிருக்கிறேன் நான்.

நான் பத்தாம் வகுப்பில் பள்ளி அளவில் இரண்டாம் இடம் பெற்றதை உ ன் வாழ்நாள் சாதனையாக்கிக் கொண்டாடினாய்.

எனக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்து,சென்னைக்கு முதன் முதலாய் இருவரும் வந்தோம். அதிகாலை 3 மணிக்கு சைதாப் பேட்டையில் வந்திறங்கி என் பெட்டி படுக்கையை உன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு நடந்து வந்து ஹாஸ்டலில் சேர்த்தாய் என்னை.

ஹாஸ்டலில் உறவுக் கார சீனியர் மாணவனிடம் இவன் இது வரை ஹாஸ்டலில் இருந்ததில்லை என்றும், இவனைப் பத்திரமாய்ப் பார்த்துக் கொள்ளும் படியும் கை கூப்பி இறைஞ்சினாய்.

கிடைத்த சொற்ப சம்பளத்தில், பால்ய காலத்தின் ஆசைகள் நிராசைகளாகி விடாமல் எல்லாப் பண்டிகைகளையும் மிக மகிழ்ச்சியாய் கடக்கக் கற்று கொடுத்திருந்தாய்.

நீ அதிகம் படிக்க வில்லையென்றாலும்,சகல திசைகளுக்கும் என்னை நீ அனுப்பி வைத்தாய் கற்றுணரவும்,பெற்றுத் தெளியவும்.அக்கட்டற்ற சுதந்திரம் தான் தறி கெட்டழியாமல் நான் கட்டமைத்த வாழ்வின் அடித்தளம்.

எல்லாவற்றிற்கும் மேலாய் 7 வருடங்கள் நீ என் பிள்ளைகளையும்,அவர்களின் தேவைகளையும் நிபந்தனையற்ற உன் அன்பினால் உச்ச பட்ச அக்கறையுடன் கவனித்துக் கொண்டாய்.

வையகமும்,வானகமும் ஆற்றலரிது; எவ்வளவு நன்றியுரைப்பினும் போதாது அவ்வுதவிகளுக்கு!

மறு நாள் காலை!

இன்னும் உன் உடல் நிலை மோசமானதாக தெரிவித்தார்கள். மருந்துகளின் வீரியத்தை எவ்வளவு அதிகப் படுத்தினாலும் எதற்கும் எதிர் வினை இல்லை உன்னிடமிருந்து. அதிகபட்சம் நாளை அதிகாலை என கெடு விதித்து இடியை இறக்கினார்கள்.

தேற்றக் கூட யாருமின்றித் தனி ஒருவனாய் கொடுந்துயரத்துடன் என் வாழ்நாளின் அதிகபட்சக் கதறலை ஐ.சி.யு வில் கண்டதிர்ந்த ஓர் இஸ்லாமியப் பெருமகன் தன் மகன் சிறுநீரக மாற்று சிகிச்சையிலுருப்பதையும் மறந்து உனக்காக கை கூப்பித் தொழுதார் அன்பே உருவான அல்லாஹ்விடம்! காலம் என்ன தான் ஈவிரக்கமின்றித் தாக்கினாலும் மனிதம் என்றும் மரிப்பதில்லை எனும் பேருண்மையை இது போன்ற மனிதர்களின் மூலம் அவ்வப்போது தெரியப் படுத்திக் கொண்டே இருக்கும்.

இதெதுவுமறியா வண்ணம் செயற்கை சுவாசக் கருவிகள் மூலம் சுவாசித்துக் கண்ணயர்ந்திருந்தாய்.

மருந்தளிக்கும் மருத்துவரின் திறமையும்,ஆரோக்கியமளிக்கும் ஆண்டவனின் அருளும் என்ன செய்து விட முடியும் எல்லாம் எல்லை மீறிப் போன பின்!

மீண்டும் அழைப்பு ஐ.சி.யு வில் இருந்து! கடைசியாக ஏதும் பேச வேண்டியிருந்தால் பேசுங்கள் என்று கூறி சுவாசக் கருவியை அகற்றினார்கள் ஒரு நிமிடத்திற்கு .

அப்பா என்றேன்! என்னை நோக்கி சிறு அசைவு.மீண்டும் அப்பா என்றழைத்தேன் அழுகையினூடே! சிறிது இமை திறந்து பார்த்தாய். உன் கண்கள் தொடுத்த கேள்விக் கணைகளை எதிர் கொள்ளத் திராணியற்று நிலை குலைந்து நின்றேன் நான்.ஐயோ!...துள்ளத் துடிக்க,குற்றுயிரும் குலையுயிருமாய் மரணத்தை நோக்கி அணு அணுவாய் செல்லும் சக மனிதனின் கண்களை உற்று நோக்குவது எவ்வளவு பெரிய கொடுமை.

அதிலும்,எனக்கு உயிரளித்த உடலின் உயிர் அப்படிப் பிரிவதைக் கண்டு நொறுங்கி நின்றேன் நான். எனக்கு சோறூட்டிய,சைக்கிள் ஓட்ட,நீச்சலடிக்கக் கற்று கொடுத்த,அழகாக எழுதக் கற்றுக் கொடுத்த கரங்களின் விரல் பற்றினேன்.எதுவோ சொல்ல நீ எத்தனித்தாய் அப்பா..நாக்கு ஒரு பக்கமாக ஒதுங்கியதைக் காணத் தைரியமின்றி மீண்டும் செயற்கை சுவாசமளிக்கச் சொன்னேன். மயக்க நிலைக்குச் சென்றாய் நீ!

அன்றைய இரவு நீண்ட உறக்கமற்ற இரவானது! அதிகாலையில் உறக்கத்திலேயே உயிர் பிரிந்ததாய்ச் சொன்னார்கள். செயற்கை சுவாசக் கருவி அகற்றப் பட்டிருந்தது. வெள்ளைத் துணி போர்த்தப்பட்ட சலனமற்ற உன் உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டது. சொந்த மண்ணை நோக்கிப் பிரயாணப்பட்டோம் உயிரற்ற உடலாய் நீயும், உயிருள்ள பிணமாய் நானும்!

உன்னை நான் இன்னும் அக்கறையாகக் கவனித்திருக்க வேண்டும் அப்பா. அவ்வாறு செய்திருந்தால் முன்னரே இந்நோய் கண்டறியப்பட்டு குணப்படுத்தப் பட்டிருக்கலாம்.

சிறு கவனக் குறைவு இப்படியோர் சீரழிவைத் தருமென நினைக்கவில்லை அப்பா!

கவனக் குறைவால் அறியாமல் செய்த இக்குற்றமே என் வாழ்நாள் தண்டனை!

இப்பூவுலகில் என் கடமைகள் முடித்து உன்னைச் சந்தித்து மன்னிப்பு கேட்க "நேரில் வருவேன்" ஒரு மாபெரும் நியாயத் தீர்ப்பு நாளில்!

அது வரை இக்கடிதமே உன்னிடத்தில் நான் வைக்கும் மன்னிப்பு கோரிக்கை!

மன்னித்து ஆசீர்வதித்தருள் அப்பா!

என்றும் தீராப் பெரும் ப்ரியத்துடன்,

உன் அன்பு மகன்

அன்பானந்தன் இராஜரத்தினம்

Letter Contest

உங்களை மதிக்கத் துவங்கியதிலிருந்து எல்லாமே மாறிவிட்டது! - மகனின் பூரிப்பு | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

உங்க அன்ப தொல்லைன்னு நினைச்சுட்டேன்! - அம்மாவின் இழப்பு உணர்த்திய பாடம் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மீண்டும் மீண்டும் நினைவில் வரும் அந்த இறுதி ஆறு நாட்கள்! - | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

உங்கல யார் ஒதுக்குனாலும் நான் இருக்கேன்மா! - மகளின் வாக்கு| #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஆட்டிசம் உள்ள அண்ணன், தங்கையின் தனிமை - அப்பாவின் தவிப்பை சொல்லும் மடல் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அன்புடனும், மனசாட்சியுடனும் இரு! - அம்மாவின் எதிர்பார்ப்பு | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க