என்னதான் ஆச்சு ஏர் இந்தியாவுக்கு..? மீண்டும் தில்லிக்கே திரும்பிய விமானம்!
ஆட்டிசம் உள்ள அண்ணன், தங்கையின் தனிமை - அப்பாவின் தவிப்பை சொல்லும் மடல் | #உறவின்கடிதம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
அன்புள்ள மீனு குட்டிக்கு,
ஒரு மாதம் ஆகிறது. நீ என்னிடம் சரியாகப் பேசி என் கோபம், பார்வை, காட்டுக் கத்தல். எல்லாமே உன்னைக் காயப்படுத்தியதி்ல் எந்த வியப்புமில்லை.
கோபமாக இருக்கும்போது தயவுசெஞ்சி உன் முகத்தைக் கண்ணாடியில பார். எந்த லட்சணத்தில இருக்கும்னு அப்பவாது உனக்குப் புரியும் னு அம்மா அடிக்கடி என்னிடம் சொல்வாள் .அது உண்மைதான். கோபத்தில் என்னையே எனக்குப் பார்க்கப் பிடிக்காதபோது குழந்தை நீ எப்படித் தாங்குவாய் ?
நான் 20 வயது கல்லூரி மாணவி. இன்னுமா நான் உங்களுக்கு மீனுகுட்டி? இனி அப்படி அழைக்காதீர்கள். எத்தனை முறை என்னைத் திட்டியிருப்பாய்.

நான் மட்டுமா? மகள் எத்தனை வயதைக் கடந்தாலும் மூன்று வயது போலத்தானே எல்லா அப்பாக்களுமே நினைக்கிறார்கள்.
இன்றுபோல் அன்று உன்னைக் குழந்தையாக நினைக்கவில்லையே. நினைத்திருத்தால் நான் திட்டியிருக்கமாட்டேனே. இப்படியொரு பிரிவும் நேர்ந்திருக்காதே.
ஒவ்வொரு தந்தையர் தினத்திலும் பகுதி நேரத்தில் நீ சம்பாதித்தப் பணத்திலிருந்து ஏதாவது ஒரு பரிசைத் தருவாய். ஆனால் இம்முறை என்னைக் கடுகளவும் கண்டுகொள்ளவில்லை.
பத்து வயதில் உன் பஞ்சு விரல்களால் எழுதிய தந்தையர்தின வாழ்த்து மடலைப் படித்துப் பார்த்துக் குறையை நிவர்த்தி செய்கிறேன். நம் பிரிவை நினைத்து வேதனையடைகிறேன்.அந்த மனப்புழுக்கம் நம்மூர் யூட்டாப் பாலைவனத்தைக் காட்டிலும் அதி்கமாகவே கொதிக்கிறது.
அப்படி என்ன தவறு செய்துவிட்டேன் நான்? ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய்?
அதற்கான காரணத்தை நினைவுக்குக் கொண்டுவர முயல்கிறேன். சண்டையில் முடிந்த அந்த உரையாடலை அப்படியே பதிவு செய்கிறேன் கீழ்கண்டவாறு.
***
நீ இந்தியாவுக்குப் போய் மூனு வருசமாகுது மீனு. அண்ணன் மேல துளிகூட பாசமில்லையா? பார்க்கணும்னு ஏன் உனக்குத் தோனலை?
அண்ணனாலதான் நான் அமெரிக்காவில் தனியா கஷ்டப்படறேன். அம்மாவைப் பிரிஞ்சுப் பத்து வருசமா தனியா இருக்கேன். ப்ரன்ட்ஸும் எனக்கு அதிகமா இல்லை. பேசறதுக்குக் கூட எனக்கு ஆள் இல்லை. அம்மா என்கூட ஏன் அமெரிக்காவில் தங்கக்கூடாது?
விளையாடாத மீனு. நம்ம குடும்பத்தோட பிரச்சனையை உனக்குக் கிளிப்பிள்ளைக்குச் சொல்ற மாதிரி ஆயிரம் தடவை சொல்லிட்டேன்.
அப்போ..அண்ணன் மட்டும்தான் உங்களுக்குப் பி்ள்ளையா?
அண்ணனுக்கு ஆட்டிசம். அவனாலதான் நீ கஷ்டப்பட்ட. எல்லாமே எங்களுக்குத் தெரியும். எப்போதும் நானும் அம்மாவும் அண்ணனையே பார்க்கறதாலதான் உன்மீது எங்களால அட்டென்சன் சரியாக் கொடுக்கமுடியல.
அண்ணனால என் லைஃபே ஸ்பாயில் ஆயிடுச்சு.(இதைச் சொல்லும்போதே உடைந்துபோய் அழுகிறாய்..)

நீ கஷ்டப்படக்கூடாது என்பதற்காகத்தான் பத்து வருசம் முன்னாடியே கோயம்புத்தூர் ஹாஸ்டல்ல உன்னைச் சேர்த்தோம்.அங்க பிடிக்கலைன்னு ஒரே மாசத்துல யூ டர்ன் அடிச்சு திரும்ப அமெரிக்கா ஸ்கூலுக்கே வந்து படிக்க ஆரம்பிச்சுட்ட. இல்லைனா நீ அம்மா கூடயே சென்னையில வாழ்ந்திருக்கலாம். இது உன்னோட தப்புதான்.(என் கோபம் அதிகமாகி உரக்கச் சத்தம்போட்டேன்..)
எப்படி என்னால இந்தியாவுல படிக்கமுடியும்.நான் கருப்பா இருக்கறேன்னு எப்படியெல்லாம் அங்க டிஸ்கிரிமினேசன் பண்ணாங்க தெரியுமா?(உன் அழுகை தொடர்ந்தது..)
அதனாலதானே உனக்காக நான் அமெரிக்காலயும், அண்ணனுக்காக அம்மா இந்தியாவுலயும் தியாகம் பண்ணிட்டு வாழ்க்கையை ஓட்டறோம்.ஏன் உனக்குப் புரியமாட்டேங்குது.(என் குரல் தழுதழுத்தது)
அண்ணன்,அம்மா எல்லாரும் இங்கயே அமெரிக்காவுல இருக்கலாமே?(தொடர்ந்து அழுகிறாய். உன் பேச்சு பாதிதான் புரிந்தது)
கீழ விழுந்த ரெக்கார்ட் மாதிரி திருப்பித் திருப்பி அதையே சொல்லாதே மீனு. அண்ணன் பிகேவியர் சரியில்லைன்னுதானே அமெரிக்க ஸ்கூல்ல சஸ்பென்ட் பண்ணாங்க. அதனாலதானே சென்னையில வீக்லி போர்டிங் ஸ்பெசல் ஸ்கூல்ல அண்ணனைச் சேர்த்தோம்.
எப்படி அம்மா அண்ணனைத் தனியா விட்டுட்டு உன்கூட அமெரிக்காவில் தங்கமுடியும். வாரத்துக்கு ஒரு நாள் வீட்டுக்கு வந்தாலும் அம்மா அவனுக்குப் பிடித்ததெல்லாம் சமைத்துப் போடறாங்க. அண்ணனும் ஹேப்பியா இருக்கான்.(கண்களை மூடிக்கொண்டுதான் பொறுமையாகப் பேசினேன்.கோபம்தான் குறையவில்லை)

பிரவீன்..பிரவீன்.. பிரவீன்.(உன் சத்தம் என்னை மிரளவைத்தது)
வீட்டுப் பேரை எடுத்துகிட்டா “பிரவீன் பேலஸ்” வைஃபை பாஸ்வேர்ட் எடுத்துகிட்டா பிரவீன் பர்த்டே. எங்கயாவது என் பேர் உங்களுக்கும் அம்மாவுக்கும் ஞாபகம் வருதா?பிரவீன் மட்டும்தான் உங்களுக்குப் பிள்ளையா. நான் பிள்ளையே இல்லையா.எதுக்காக என்னைப் பெத்தீங்க? (உன் அழுகை அதிகமானதால் அதற்குமேல் உன்னால் பேசமுடியவில்லை)
******
இப்படித்தான் அன்று வாக்குவாதம் முற்றியது . நீ என்னிடம் கடைசியாகப் பேசியதும் அதுதான். கடுஞ்சினத்தில் என் முகத்தைப் பார்க்க முடியாமல் அறைக்கதவை ஓங்கி அடித்தாய். என் கன்னத்தில் அறைந்த மாதிரி உணர்ந்தேன்.
கடந்த ஒரு மாதமாக ஒரே வீட்டில்தான் வாழ்கிறோம்.ஆனால் தூரத்து சொந்தக்காரர்களைப்போல் ஏனோதானோவென்று பேசிக்கொள்கிறோம்..

நான் உனக்கு எழுதும் இக்கடிதத்தை விகடன் தேர்வு செய்தால் அம்மாவும் நானும் இயக்குநர் ராமை சந்திக்கலாம் என்கிறார்கள். ஒருவேளை அது நடந்தால் நானும் அம்மாவும் இயக்குநர் ராமிடம் ஒன்றைச் சொல்லலாம் என்று நினைக்கிறோம்.
அது..
அன்பே ராம், ஒருவேளை பேரன்பு இரண்டாம் பாகம் நீங்கள் எடுத்தீர்களென்றால் படத்தில் ஆட்டிசக் குழந்தையோட தங்கச்சியோ தம்பியோ யாராவது ஒருத்தர் கூட இ்ருக்கறமாதிரி காட்சிகள் அமையுங்கள். எங்களை மாதிரி பெற்றோர்களுக்குப் பாடமாக இருக்கும்.
ஏதோ விரக்தியில் என் பிரச்னைகளைக் கையாளத் தெரியாமல் ராமிடம் பதில் தேடுகிறேன்.
நிதானமாக யோசித்துப் பார்த்தால் பேரன்பு படத்தின் முதல் காட்சியிலேயே ராம் இதற்கான பதிலை எழுதியிருந்தார் .மறக்கமுடியாத அந்த வசனம் இதுதான்..
ஒருத்தர் மாதிரி இன்னொருத்தார் இல்லைன்னு சொல்றது எவ்வளவு பெரிய வன்முறை தெரியுமா?
இதை இன்னொருமுறை நிதானமாகப் படிக்கும்போது உன் அண்ணனுக்காக மட்டுமல்ல. உனக்காகவும் வரிந்துக்கட்டிக்கொண்டு ராம் என்னிடம் வாதாடுவதைப் போல உணர்கிறேன்.என் தவறையும் மெல்ல மெல்ல உணர்கிறேன்.
எவனுக்கு மனத்தில் பிரச்னைகள் அதிகமாக இருக்கிறதோ அவனே எழுத வருகிறான் என்று ஜெமோ எழுதும் கலை என்ற புத்தகத்தில் சொல்லியி்ருப்பார்.
காதுகள் புத்தகத்தில் தன் மனப்பிரச்னைகளை கொட்டி வாழ்ந்திருப்பார் எம் வி வெங்கட்ராம். அதை எழுதி முடித்தவுடன் தன் மனப்பிரச்னைகள் தானாகவே குறைந்துவிட்டதாக இறுதியுரையில் சொல்லியிருப்பார்.
அதே போல இக்கடிதத்தை எழுதி முடித்தவுடன் என் தவறையும் நான் உணர்கிறேன்.ஆம். அன்று நான் உன்னைக் கடிந்துரைத்திருக்கக்கூடாது. என்னை மன்னித்துவிடு செல்லமே.
அன்புடன்
அப்பா பாலு
