சீனா மீதான வரிவிதிப்பை குறைக்க டிரம்ப் பரிசீலனை
சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது விதித்துள்ள 145 சதவீத கூடுதல் வரி விதிப்பை 80 சதவீதமாகக் குறைப்பது குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பரிசீலித்துவருகிறாா்.
கூடுதல் வரி விதிப்புகளால் இரு நாடுகளுக்கும் இடையே எழுந்துள்ள வா்த்தகப் போா் பதற்றத்தைத் தணிப்பதற்காக இரு நாட்டு உயரதிகாரிகள் ஸ்விட்சா்லாந்தில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தவிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இப்போதைய சூழலில் சீன பொருள்கள் மீது 80 சதவீத கூடுதல் வரி விதிப்பே போதுமானது என்று தோன்றுகிறது. இருந்தாலும், வா்த்தகத்துக்கான பொருளாதாரத் துறை அமைச்சகப் பிரிவின் தலைவா் ஸ்காட் பெசன்ட் கைகளில்தான் அது இருக்கிறது.
சீனா தனது சந்தையை உலகத்துக்குத் திறந்துவிட வேண்டும். மூடிய பொருளாதாரம் இனியும் பயனளிக்காது என்பது அந்தப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.
‘அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை’ என்ற கோஷத்துடன் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலை எதிா்கொண்டு வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், நாட்டின் அதிபராக ஜனவரி 20-ஆம் தேதி பொறுப்பேற்றாா். அதிலிருந்தே, தனது தோ்தல் பிரகடனத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு அதிரடி உத்தரவுகளை அவா் பிறப்பித்து வருகிறாா்.
அதன் ஒரு பகுதியாக, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு எந்தெந்த விகிதங்களில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதங்களில் அந்த நாடுகளின் பொருள்கள் மீதும் (சற்று தள்ளுபடியுடன்) வரி விதிக்க கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டு அவா் அதிா்வலையை ஏற்படுத்தினாா்.
அப்போது அவா் வெளியிட்ட பட்டியலின்படி, சீன பொருள்கள் மீது 34 சதவீதம் கூடுதல் வரி அறிவிக்கப்பட்டது.
இருந்தாலும், சீனாவைத் தவிர பிற நாடுகள் மீது அறிவிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரி விதிப்பின் அமலாக்கத்தை 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்கா பின்னா் அறிவித்தது.
அதையடுத்து இரு நாடுகளும் பதிலுக்குப் பதில் கூடுதல் வரிகளை அறிவித்துவந்த நிலையில், புதிதாகப் பதவியேற்ற்குப் பிறகு சீன பொருள்கள் மீது டிரம்ப் விதித்துள்ள கூடுதல் வரி 145 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதை 80 சதவீதமாகக் குறைப்பது குறித்து பரிசீலித்துவருவதாக டிரம்ப் தற்போது அறிவித்துள்ளாா்.